உக்ரைனில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் பிரித்தானிய வீரர்கள்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி
ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட இரு பிரித்தானிய வீரர்கள் உக்ரைனில் மரண தண்டனையை எதிர்கொள்வதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் Donetsk பகுதியில் ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக போரிட்டு வந்த பிரித்தானியர்களான 48 வயது ஷான் பின்னர், மற்றும் 35 வயது ஆண்ட்ரூ ஹில் ஆகிய இருவருமே தற்போது மரண தண்டனையை எதிர்கொள்வதாக தெரிய வந்துள்ளது.
இவர்கள் மீதான குற்றம் நிரூபணமானால், துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றே கூறப்படுகிறது. இவர்களுடன் கைதான இன்னொரு பிரித்தானியர் 28 வயதான ஐடன் அஸ்லின் தொடர்பில் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
உக்ரைனின் Donetsk பகுதியானது ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் கைப்பற்றப்பட்டு, 2014 முதல் தனித்த பிராந்தியமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், Donetsk பகுதி மக்களுக்கு எதிராக தாங்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இந்த மாத துவக்கத்தில் ஷான் பின்னர் மற்றும் ஆண்ட்ரூ ஹில் ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது.
தொடர்புடைய மூன்று பிரித்தானியர்களும் மரியுபோலில் சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலையில் ரஷ்யப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும், ஷான் பின்னர் மற்றும் ஆண்ட்ரூ ஹில் ஆகிய இருவரும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளதாக Donetsk பகுதி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி கைதான பிரித்தானியர்களை வாடகை கொலைகாரர்கள் என குறிப்பிட்டுள்ள Donetsk பகுதி அதிகாரிகள், அவர்கள் மீதான விசாரணையும் முடுவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் தண்டனை நிறைவேற்றும் நாள் தொடர்பில் நீதிமன்றம் உறுதி செய்யும் என்றே அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.