இழப்பீடு வேண்டும்... பிரித்தானியா மீது வழக்குத் தொடர கரீபியன் நாடுகள் திட்டம்
Caribbean nations plan to sue UK for slavery reparations: அடிமைத்தனத்திற்கான இழப்பீடு கோரி பிரித்தானியா மீது வழக்குத் தொடர கரீபியன் நாடுகள் திட்டமிட்டுள்ளன.
கரீபியன் நாடுகளிடமிருந்து அடிமைத்தன இழப்பீடு தொடர்பான ஒரு சாத்தியமான வழக்கை பிரித்தானியா எதிர்கொள்ள இருக்கிறது.
இழப்பீடு கோரும்
நவம்பரில் ஆன்டிகுவாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்த விவகாரம் எழுப்பப்படவுள்ளது; இதில் மன்னர் பங்கேற்க உள்ளார்.

வரவிருக்கும் 28-வது காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில், இழப்பீடு கோரும் விவகாரத்தை முன்னெடுக்கத் தயாராகி வருவதாக கரீபியன் சமூகக் குழு கடந்த வாரம் உறுதிப்படுத்தியது.
இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கொடூரமான குற்றமாகக் குறிப்பிடப்பட்ட அடிமை வணிகத்திற்காக, உறுப்பு நாடுகள் நீண்ட காலமாக டிரில்லியன் கணக்கான இழப்பீட்டைக் கோரி வருகின்றன.
அமெரிக்கா அடிமை முறையை ஒழிப்பதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்பே, 1834-இல் பிரித்தானியா தனது பேரரசின் பெரும்பகுதிகளில் அம்முறையை ஒழித்தது. இருப்பினும், பிரித்தானியா நீண்ட காலமாக இழப்பீட்டுக் கோரிக்கைகளை நிராகரித்து வருகிறது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தெரிவிக்கையில், அட்லாண்டிக் கடந்த அடிமை வர்த்தகம் வெறுக்கத்தக்கது. மக்களின் உணர்வுகளின் வலிமையை நாங்கள் முழுமையாக உணர்கிறோம் என்று கூறியுள்ளது.
மேலும், இங்கிலாந்தின் நிலைப்பாடு தெளிவானது, நாங்கள் இழப்பீடு வழங்குவதில்லை, இனிமேலும் வழங்கப்போவதில்லை. மட்டுமின்றி, கடந்த காலத்தின் மரபுகள் குறித்து நமது அனைத்துக் கூட்டாளிகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதில் பிரித்தானியா உறுதியுடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பார்படாஸ் பிரதமர் மியா மோட்லி, இழப்பீடு பெறுவது குறித்து விவாதிக்க இந்த வாரம் ஒரு மாநாட்டை நடத்துகிறார்; மேலும், சர்வதேச நீதிமன்றங்கள் வாயிலாகச் சட்ட நடவடிக்கை எடுப்பதை ஒரு வழியாகவும் அவர் முன்மொழிந்துள்ளார்.
நீதி கிடைக்க வேண்டும்
பல தலைமுறைகளாக அடிமை உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காகப் பிரித்தானிய அரசாங்கம் எவ்வாறு கடன் சுமையை ஏற்றுக் கொண்டதோ, அதேபோல இந்த இழப்பீட்டுத் தொகையையும் பல தலைமுறைகளாகச் செலுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

யாரையும் திவாலாக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை, ஆனால் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார். அனைத்து வகையான இனப் பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையில் பிரித்தானியா ஒரு தரப்பினராக உள்ளது. மேலும், இனப் பாகுபாட்டின் எந்தவொரு நிகழ்வுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று அந்த ஒப்பந்தம் கூறுகிறது.