பிரபல மருத்துவர் உட்பட ஐவரை சுட்டுக்கொன்ற நபர்: விசாரணையில் தெரிய வந்த பகீர் பின்னணி
அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில் பிரபல மருத்துவர் உட்பட ஐவரை சுட்டுக்கொன்ற நபர் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறித்த படுகொலை சம்பவத்திற்கு பின்னர் பிலிப் ஆதம்ஸ் என்ற அந்த முன்னால் கால்பந்து நட்சத்திரம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆதம்ஸின் பெற்றோர் ராக் ஹில்லில் உள்ள அந்த மருத்துவரின் வீட்டிற்கு அருகில் வசிக்கிறார்கள், மேலும் தனக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவரையே ஆதம்ஸ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.
இந்த கொலை வழக்கு தொடர்பில் குற்றவாளியை கண்டு பிடிக்கும் நோக்கில் அருகாமையில் உள்ள குடியிருப்பில் மணிக்கணக்கில் தேடியதாக யார்க் கவுண்டி ஷெரிப்பின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவர் ராபர்ட் லெஸ்லி(70) அவரது மனைவி பார்பரா லெஸ்லி(69) ஆகியோர் பேரப்பிள்ளைகளான அடா லெஸ்லி(9) மற்றும் நோவா லெஸ்லி(5) ஆகியோருடன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக யார்க் கவுண்டி அரசு மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, மருத்துவரின் குடியிருப்பில் உதவியாளராக பணியாற்றி வந்த 38 வயது நபரும் கொல்லப்பட்டுள்ளார்.
இவர்களுடன் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்ட ஆறாவது நபர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் உள்ளார் என யார்க் கவுண்டி ஷெரிப்பின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கால்பந்து நட்சத்திரம் ஆதம்ஸின் இந்த கொலைவெறிக்கு என்ன காரணம் என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
