ஜேர்மனியில் தேசத் துரோக வழக்கில் தேடப்படும் பிரபலம்: வெளிநாட்டுக்கு தப்பியதாக தகவல்
ஜேர்மனியில் ஊரடங்கு நடவடிக்கைகள் கொரோனா பரவல் உள்ளிட்டவையை கடுமையாக விமர்சித்து, மக்களை திசை திருப்பியதாக கூறி, தேசத் துரோக வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல சமையல் கலைஞர் வெளிநாட்டுக்கு தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மானிய அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த Attila Hildmann தற்போது துருக்கியில் இருப்பதாக அவரே வெளிப்படுத்தியுள்ளார்.
பொதுமக்களிடையே வெறுப்பை தூண்டுதல், சட்டங்களை மதிக்காதது, கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கடும் விமர்சனங்களை முன்வைத்து, மக்களை திசை திருப்பி வந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மட்டுமின்றி, தேசத் துரோக வழக்கில் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் Attila Hildmann ஜேர்மனியில் இருந்து துருக்கிக்கு தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. Attila Hildmann-கு எதிரான விசாரணையை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்தே ஜேர்மன் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
தொடர்ந்து அவரது குடியிருப்பை சோதனையிட்ட அதிகாரிகள், மடிக்கணினி, மொபைல் உள்ளிட்ட முக்கியமான அனைத்தையும் கைப்பற்றி சென்றனர்.
ஜேர்மன் மற்றும் துருக்கி குடியுரிமை கொண்ட Attila Hildmann, மிக விரைவில் தமக்கான ஜேர்மன் அடையாள அட்டையை சமர்ப்பிக்க உள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்.
முன்னதாக குறிப்பிட்ட அரசியல்வாதிகளை பொதுவெளியில் தூக்கிலேற்ற வேண்டும் என வாதிட்டார்.
மட்டுமின்றி, ஜேர்மனியின் ஆட்சி பொறுப்புக்கு ஹிட்லர் தான் சரியான தெரிவு எனவும், தற்போதைய கொரோனா ஆட்சி அடுக்கடுக்கான பொய்களால் நாட்டை சீரழித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.