மயானங்களில் இடம் இல்லை... தெருக்களில் புதைக்கப்படும் சடலங்கள்: நாளுக்கும் எகிறும் பலி எண்ணிக்கை
பிரேசில் நாட்டில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் எகிறும் நிலையில், சடலங்களை தெருக்களில் புதைக்கும் மிக மோசமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பிரேசில் நிர்வாகத்தால் இதுவரை கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. உருமாறிய கொரோனாவின் தாக்கம் மொத்தமாக புரட்டி எடுத்து வருகிறது.
வியாழக்கிழமை வெளியான தகவலின் அடிப்படையில் பிரேசிலில் 400,000 கடந்துள்ளது கொரோனா இறப்புகள். மட்டுமின்றி மயானங்களில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தெருக்களில் சடலங்களை புதைக்கும் அவல நிலைக்கு அங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவை அடுத்து கொரோனாவால் அதிக மரண எண்ணிக்கை கொண்ட நாடாக தற்போது பிரேசில் மாறியுள்ளது.
நாட்டின் அனைத்து கல்லறைத் தோட்டங்களும் நிரம்பியுள்ளன. ஒரு கொடுங்கனவினூடே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார் கல்லறைத் தோட்டம் ஒன்றின் நிர்வாகி ஒருவர்.
நாளுக்கும் மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது கனரக இயந்திரங்களின் உதவியுடன், குழி எடுப்பதாகவும், அதில் தற்போது கூட்டாக பலரின் சடலங்களும் நல்லடக்கம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, பல கல்லறைத் தோட்டங்களில் இனி சடலங்களை நல்லடக்கம் செய்ய முடியாத மிக கொடூரமாக நிலை உள்ளதாகவும், இதனால் தெருக்களிலேயே சடலங்களை புதைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3001 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது, கடந்த பல நாட்களாக தொடர்ந்து வருவதாலையே, தற்போது மயானங்களில் இடம் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
மேலும், நாட்டின் பெரும்பாலான மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் மிக மோசமான நிலையில் உள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, நோயாளிகளின் உறவினர்களே, அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் 13% மக்களுக்கு, அதாவது 28 மில்லியன் மக்களுக்கு மட்டுமே, இதுவரை முதல் டோஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பூசியும் எடுத்துக் கொண்டவர்கள் எண்ணிக்கை 12.7 மில்லியன் மட்டுமே.
நாட்டின் 27 மாகாணங்களில் உள்ள முக்கியமான 14 நகரங்கள் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இரண்டாவது டோஸ் அளிக்கும் நடவடிக்கைகளை ரத்து செய்துள்ளது.