மூன்று வார்த்தைகளில் விடுக்கப்பட்ட மிரட்டல்... பாதுகாப்பை பலப்படுத்தும் ஐரோப்பிய நாடுகள்
சேம்பியன்ஸ் லீக் ஆட்டங்கள் நடக்கும் மைதானங்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாக பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளிலும் உள்ள அமைச்சர்கள் மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தியுள்ளனர். ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான ஊடகம் ஒன்று செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் காலிறுதி போட்டிகளை நடத்தும் மைதானங்களின் பல படங்களை வெளியிட்டுள்ளது.
அதில், முகமூடி அணிந்த நபர், அனைவரையும் கொன்று விடுக என மூன்று வார்த்தைகளில் மிரட்டல் விடுப்பதும் பதிவாகியுள்ளது. வெளியான புகைப்படங்களில் அர்சனலின் எமிரேட்ஸ் மைதானம், Bernabeu மைதானம், Metropolitano மைதானம் மற்றும் Parc des Princes மைதானம் என பட்டியலிடப்பட்டுள்ளது.
ஆனால், அச்சுறுத்தல் இருப்பதை உறுதி செய்துள்ள அதிகாரிகள் மாட்ரிட், பாரிஸ் மற்றும் லண்டனில் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றே அறிவித்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகள் குறிவைத்துள்ளது எந்த மைதானம் அல்லது எந்த ஆட்டம் என்பது குறிப்பிடவில்லை என்பதால், எஞ்சிய அனைத்து ஆட்டங்கள் நடக்கும் மைதானங்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளனர்.
இந்த வாரம் இரண்டு காலிறுதிப் போட்டிகள் மாட்ரிட்டில் நடைபெற உள்ளன. இதனையடுத்து 2,000 பொலிசார் மற்றும் அதிகாரிகள் குழு மாட்ரிட் நகரில் களமிறக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயினின் விளையாட்டு அமைச்சர் Pilar Alegría தெரிவித்துள்ளார்.
ஒருவித உளவியல் பிரச்சாரம்
மாட்ரிட் நகர செயல் மேயர் Inmaculada Sanz தெரிவிக்கையில், ஸ்பெயினில் பயங்கரவாத எச்சரிக்கை நிலை ஐந்தில் நான்காக இருந்தது என்றும் இது அதிக ஆபத்து என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் ஒருவித உளவியல் பிரச்சாரம் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, செவ்வாய்க்கிழமை லண்டனில் பேயர்ன் மியூனிக் அணியுடன் ஆர்சனல் விளையாடுகிறது.
பெருநகர காவல்துறை துணை உதவி ஆணையர் Ade Adelekan தெரிவிக்கையில், ஐரோப்பாவிலும் லண்டனிலும் சேம்பியன்ஸ் லீக் போட்டிகளை குறிவைத்துள்ளது தொடர்பான எச்சரிக்கை தகவல்களை அறிவோம், ஆனால் திட்டமிடப்பட்டபடியே ஆட்டம் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |