புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கான திட்டங்கள் இந்த நாட்டில்தான் உருவாகின்றன... பிரித்தானியா பரபரப்புக் குற்றச்சாட்டு
புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கான திட்டங்கள் ஜேர்மனியில்தான் இடப்படுவதாக பிரித்தானியா பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.
புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவது பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு ஒரு பெரும் தலைவலியாகவே மாறிவிட்டது.
அப்படி பிரித்தானியாவுக்குள் நுழைவோர், பிரான்ஸ் வழியாகவே ஆங்கிலக்கால்வாய் மூலம் பிரித்தானியா வர முயற்சிப்பதால், பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் கடுமையான மோதல் போக்கு இருந்துகொண்டே வந்தது.
இந்நிலையில், திடீரென பிரான்சை குற்றம் சாட்டுவதை நிறுத்திக் கொண்ட பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல், தனது கோபத்தை ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் திருப்பினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் திறந்த எல்லைக் கொள்கைகளே புலம்பெயர்வோர் ஐரோப்பாவுக்குள் தடையின்றி நுழையக் காரணம் என்று சாடிய பிரீத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத் தலைமைக்கு அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையில், பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக புலம்பெயர்வோர் திட்டமிடும் இடமாக ஜேர்மனி செயல்பட்டு வருவதாக நேற்று இரவு ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் புகலிடம் கோர விரும்புவோர், ஜேர்மனியில் ஒன்றுகூடுவதாகவும், அங்குள்ள கடத்தல் கும்பல்கள் அதற்கு திட்டமிட்டுக் கொடுப்பதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.
அத்துடன், புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடப்பதற்கு பயன்படுத்தும் படகுகள் ஜேர்மனியில்தான் பதுக்கி வைக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவுக்குள் நுழைய திட்டமிடும் புலம்பெயர்வோரில் பத்தில் ஆறுபேர், தாங்கள் என்று ஆங்கிலக்கால்வாயைக் கடக்கிறார்களோ அன்றுதான் பிரான்சை அடைவதாகவும், அவர்கள் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து வழியாக அங்கு வந்தடைவதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.