ஜேர்மனியில் அகதி இளைஞரை சுட்டுக்கொன்ற பொலிசார் மீது நடவடிக்கை...
ஜேர்மனியில் அகதி ஒருவரை சுட்டுக்கொன்ற பொலிசார் மீது கொலைக்குற்றச்சாட்டு முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தன்னைத்தான் காயப்படுத்திக்கொள்வதாக மிரட்டிய இளைஞர்
ஜேர்மனியின் Dortmund நகரிலுள்ள காப்பகம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார் முகம்மது (Mouhamed D, 16) என்ற செனகல் நாட்டு அகதி இளைஞர்.
சென்ற ஆண்டு ஆகத்து மாதம் 8ஆம் திகதி, அவர் கத்தியால் தன்னைத்தான் காயப்படுத்திக்கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அப்போது அவர் பொலிசாரை நோக்கி கத்தியுடன் ஓடிவந்ததாகவும், பெப்பர் ஸ்பிரே தெளித்தும், டேஸர் துப்பாக்கி மூலம் தாக்கியும் நிற்காமல் அவர் மீண்டும் கத்தியுடன் ஓடிவந்ததாகவும், அப்போது பொலிசார் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டதாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கியால் சுட்டதில் முகம்மது உயிரிழந்துவிட்டார். அவர் கொல்லப்படதைத் தொடர்ந்து ஜேர்மனி முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினார்கள்.
ஆரம்பம் முதலே தவறு
ஆனால், முகம்மது விடயத்தில் பொலிசாரின் அணுகுமுறை ஆரம்பம் முதலே தவறாக இருந்ததாக அரசு தரப்பு விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய பொலிசார் மீது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
துப்பாக்கியால் சுட்ட பொலிசார் மீது கொலைக்குற்றச்சாட்டு முதல், மொத்தம் ஐந்து பொலிசார் மீது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.