பாதியில் ரத்து செய்யப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினால் சென்னை அணிக்கு தான் சிக்கல்! ஏன் தெரியுமா?
ஐபிஎல் 2021 தொடர்ந்து மீண்டும் தொடங்கினால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உச்சத்தில் இருக்கும் கொரோனா 2வது அலை காரணமாக, ஐபிஎல் 2021 தொடரை பாதியில் நிறுத்தியது.
இந்த நிலையில், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை எங்கு நடத்தினாலும் அதில் இங்கிலாந்து வீரர்கள் சர்வதேச போட்டி காரணமாக பங்கேற்க வாய்ப்பில்லை என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் தெரிவித்தது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவால், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், லிவிங்ஸ்டன் (ராஜஸ்தான் ராயல்ஸ்), சாம் கர்ரன், மொயீன் அலி (சென்னை சூப்பர் கிங்ஸ்), கிறிஸ் ஜோர்டான், டேவிட் மலான் (பஞ்சாப் கிங்ஸ்), கிறிஸ் வோக்ஸ், சாம் பில்லிங்ஸ், டாம் கர்ரன் (டெல்லி கேபிடல்ஸ்), இயான் மோர்கன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய் (ஐதராபாத் சன் ரைசர்ஸ்) ஆகிய 14 வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போகலாம்.
இந்த முடிவால், பெரிதாக பாதிக்கப்படும் அணி என்றால், ராஜஸ்தான் ராயல்சும், சென்னை சூப்பர் கிங்ஸும் தான்.
ராஜஸ்தான் அணியில் ஏற்கனவே ஸ்டோக்ஸ் காயம் காரணமாக வெளியேறிவிட்ட நிலையில், மீண்டும் ஐபிஎல் தொடங்கப்பட்டால் ஜோஸ் பட்லர், ஆர்ச்சர் விளையாட முடியாது. இவர்கள் இருவரும் அந்த அணியின் பேட்டிங், பவுலிங்கின் தூண்கள்.
சிஎஸ்கேவை பொறுத்தவரை நடப்பு தொடரில் சுரேஷ் ரெய்னாவின் ஒன் டவுன் ஸ்பாட்டில் இறங்கி, பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டும், ஸ்பின் டிராக் பிட்ச்களில், விக்கெட்டுகளை வீழ்த்தி தோனிக்கு பக்கபலமாக இருந்த மொயீன் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் இழக்க நேரிடும்.
அதைவிட முடிக்கியமாக, ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டராகவும், டோனியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்த சாம் கரணை சிஎஸ்கே இழப்பது தான் பெரும் சரிவாக இருக்கும்.