பிரித்தானியாவுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான குழந்தை அகதிகள் மாயம்: அவர்கள் என்ன ஆனார்கள்? அதிரவைக்கும் ஒரு செய்தி
பிரித்தானியாவுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான குழந்தை அகதிகள் மாயமாகியுள்ளதாக ஒரு பதறவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்த குழந்தை அகதிகள் பல்வேறு காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலர் காணாமல் போயுள்ளதாக நேற்றிரவு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அவர்கள் என்ன ஆனார்கள்?
இந்த ஆண்டு, ஒன்பது வயது வரையுள்ள பிள்ளைகள் கூட, அப்படி, காப்பகங்களிலிருந்து 744 முறை காணாமல் போயுள்ளார்கள். அவர்களில் குறைந்தது 37 பேர் 13 வயதும் அதற்கு கீழும் உள்ளவர்கள்.
அவர்களில் சிலர் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும், அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக ஆக்கப்பட்டிருக்கலாம், அல்லது, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த கோடையின்போது, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த Tuan என்ற 15 வயது சிறுவன் ஒருவன், பிரித்தானிய காப்பகம் ஒன்றிலிருந்து காணாமல் போயிருக்கிறான். பிறகு லண்டனில் சம்பந்தம் இல்லாத ஒரு நபருடன் அவன் இருப்பதை சிலர் கவனித்திருக்கிறார்கள். அவன் அடிமையாக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.