7 மாத குழந்தைக்கு தவறுதலாக செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி! பின்னர் நடந்தது என்ன?
தென்கொரியாவில் 7 மாத பச்சிளம் குழந்தைக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவை தொடர்ந்து தற்போது Omicron என்கின்ற புதிய வைரஸ் உலக நாடுகளை பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதையடுத்து தற்போது சுமார் 77க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
தென்கொரியாவில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில் செப்டம்பர் மாதம் இடையில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி அளித்தது.
இருப்பினும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்நாட்டில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தென்கொரியா நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சியோங்னம் நகரில் 7 மாத குழந்தை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த குழந்தையின் தாய், குழந்தையை அருகில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு டாக்டர் குழந்தைக்கு வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசியை போடுவதற்கு பதில் கொரோனா தடுப்பூசியை செலுத்தி விட்டார்.
இதையடுத்து அந்த குழந்தையை பல நாட்கள் ஆஸ்பத்திரியிலேயே வைத்து கவனித்து வந்தனர். எனினும் அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் நடந்திருந்தாலும், குழந்தையின் தாய் சம்பந்தப்பட்ட டாக்டரிடம் இழப்பீடு கேட்டு தற்போது வழக்கு தொடர்ந்த பின்னரே இது வெளியுலகத்துக்கு தெரிய வந்துள்ளது.