Omicron தொற்றால் யாருக்கெல்லாம் அதிகம் ஆபத்து? WHO தலைமை அதிகாரி வெளியிட்ட தகவல்கள்
கொரோனாவில் இருந்து உருமாறிய புதிய வகை Omicron தொற்றால் யாருக்கெல்லாம் அதிக ஆபத்து குறித்து மூத்த மருத்துவ விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து உருமாறிய புதிய வகை 'Omicron' மாறுபாடு உலக நாடுகளை மிரட்டி வருகின்றது. இந்த தொற்று முதல் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதையடுத்து இதுவரை சுமார் 38 நாடுகளுக்கு Omicron பரவியுள்ளது.
இருப்பினும் Omicron மாறுபாடு கண்டு பீதியடைய வேண்டாம் என்று உலக சுகாதாரத்துறை கேட்டு கொண்டுள்ளது. Omicron தொற்று வேகமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உலக சுகாதாரத்துறை தலைமை விஞ்ஞானி கூறியதாவது, டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரானில் மூன்று மடங்கு ஆபத்து அதிகமாக உள்ளது.
ஒமிக்ரான் மாறுபாடு காரணமாக தென்னாப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகின்றன. அந்த நாட்டில் அதிக குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளுக்காக தடுப்பூசிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் ஒரு சில நாடுகள் மட்டுமே குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றன. எனவே நோய் தொற்று அதிகரிக்கும் போது குழந்தைகள் மற்றும் தடுப்பூசி போடப்படாதவர்கள் அதிகமாக பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.