ஈரான் போருக்கு முன்னரே... கச்சா எண்ணெய் தொடர்பில் சீனாவின் அதிரடி நகர்வு
அமெரிக்க அரசாங்கத் தரவுகளின்படி, ஈரான் போருக்கு முன்னதாக, சீனா மற்ற எந்த நாட்டையும் விட அதிகமாகத் தனது எண்ணெய் இருப்புகளைத் தீவிரமாக அதிகரித்ததாக தெரியவந்துள்ளது.
1.4 பில்லியன் பீப்பாய்
ஈரான் போருக்கு முன்னரே, 2026-ஆம் ஆண்டிலும் சீனா தனது சரக்கு இருப்பைத் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதாக முதற்கட்ட அரசாங்கத் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீனா 15.8 சதவீதம் கூடுதலாக எண்ணெய் இறக்குமதி செய்ததாக, நியூயார்க் டைம்ஸ் இந்த மாத தொடக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
அமெரிக்க எரிசக்தித் தகவல் நிர்வாகத்தின் தரவுகளின் அடிப்படையில், சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) 32 உறுப்பு நாடுகளிடம் உள்ள 1.2 பில்லியன் பீப்பாய்களுடன் ஒப்பிடுகையில், சீனா ஏறத்தாழ 1.4 பில்லியன் பீப்பாய் எண்ணெயை இருப்பு வைத்துள்ளது.
அமெரிக்காவிடம் 413 மில்லியன் பீப்பாய்கள் மட்டுமே இருப்பு உள்ளன. மேலும், அமெரிக்கா தனது இருப்பிலிருந்து எண்ணெயை எடுத்துப் பயன்படுத்தி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் 8 மில்லியன் பீப்பாய்களை விற்பனை செய்த பிறகு, அந்நாட்டிடம் தற்போது 405 மில்லியன் பீப்பாய்கள் எஞ்சியுள்ளன.
ஈரானுடனான மோதலால் ஏற்பட்ட உயர் எரிசக்தி விலைகள் மற்றும் விநியோகத் தடைகளைச் சமாளிக்கும் வகையில், உத்திசார் பெட்ரோலியக் காப்பகத்திலிருந்து (SPR) 172 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்த நிலையில், சீனா மூன்று காரணங்களினால் இருப்புச் சேர்த்து வருவதாக ஆக்ஸ்போர்டு எரிசக்தி ஆய்வுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலாவதாக, உலகளாவிய தேவை தொடர்ந்து குறைந்து வருவதால் கச்சா எண்ணெய் விலைகள் மந்தமாகவே உள்ளன.
வியூக ரீதியான நடவடிக்கை
இரண்டாவதாக, ஏற்படக்கூடிய விநியோகச் சங்கிலி இடையூறுகள் மற்றும் ரஷ்யா, ஈரான், வெனிசுலா போன்ற முக்கிய ஏற்றுமதியாளர்கள் மீதான கடுமையான தடைகள் காரணமாக அபாயங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
மூன்றாவதாக, நீண்டகாலப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நிறுவனங்கள் தங்கள் உத்திசார் இருப்புகளை அதிகரிக்க வேண்டும் என்று ஒரு புதிய உள்நாட்டு எரிசக்தி விதிமுறை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக இருப்பதால், சீனா உலகளாவிய எண்ணெயை மிகவும் சார்ந்துள்ளது; இருப்பினும், அது மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் வியூக ரீதியான ஒரு நடவடிக்கையின் மூலம் தனது கிடங்குகளை நிரப்பியுள்ளது.
ஈரான் போர் காரணமாக, உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகம் முன்னெடுக்கப்படும் ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
மட்டுமின்றி, அமெரிக்கா தங்களது துறைமுகங்களை முற்றுகையிடுவதைத் தொடரும் வரையில், ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்திற்கு வாய்ப்பில்லை என்றும் ஈரான் சூளுரைத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |