3 வயது குழந்தைகளுக்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி! அங்கீகாரம் கொடுத்த நாடு
சீனாவில், 3 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்காக பிரத்யேகமாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அதற்கு சீனா அங்கீகாரம் கொடுத்துள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸிற்கு தற்போது 35 வயதிற்கு மேற்பட்டோருக்கே அதிகமாக போடப்பட்டு வருகிறது. இன்னும் சிறிய குழந்தைகளுக்கு ஏற்ற கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், சீனாவில், 3 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிக்கு கொரோனாவேக் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசிக்கு சீன நிர்வாகம் அங்கீகாரத்தை அளித்துள்ளது. கொரோனாவேக் தடுப்பூசி எப்போது அவசர பயன்பாட்டுக்கு வரும், எந்த வயதில் இருந்து இந்த தடுப்பூசியை வழங்குவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று சைனோவேக் நிறுவனத்தின் தலைவர் யின் வெய்டாங் கூறியுள்ளார்.
இந்த தடுப்பூசியை 2 கட்டங்களாக 3 முதல் 17 வயதுள்ள நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுக்கு செலுத்தி சைனோவேக் நிறுவனம் பரிசோதித்தது. அதில் இந்த தடுப்பூசி நம்பகமானது,
செயல்திறன் மிக்கது என்று தெரிய வந்துள்ளது. சீன மத்திய டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை சைனோவேக் நிறுவனத்தின் தலைவர் யின் வெய்டாங் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே கடந்த 1-ந் தேதி சீனாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2-வது தடுப்பூசியான சைனோவேக்கிற்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்தள்ளது. ஏற்கனவே சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசிக்கும் உலக சுகாதார நிறுவனம் தனது ஒப்புதலை அளித்திருக்கிறது
சீனா 5 தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு தனது ஒப்புதலை அளித்துள்ளது. ஏழை நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்க அமைக்கப்பட்டுள்ள கோவேக்ஸ் அமைப்பின் திட்டத்துக்காக சீனா 1 கோடி தடுப்பூசி தர முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.