உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறும் சீனா: தைவான் பகிரங்க குற்றச்சாட்டு
தைவானை சுற்றிவளைத்து இராணுவப்பயிற்சி மேற்கொண்டுவரும் சீனாவை கடுமையாக சாடிய அந்த நாட்டின் பிரீமியர், மிக மோசமான அண்டை நாட்டவர் என குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் தைபேயில் ஊடகத்தினரை சந்தித்த பிரீமியர் Su Tseng-chang, உலக நாடுகள் அடிக்கடி பயன்படுத்தப்படும் நீர்வழிப்பாதையை சீனா தன்னிச்சையாக ராணுவ பயிற்சி மூலம் அழித்து வருகிறது என குற்றஞ்சாட்டினார்.
சீனாவின் இந்த தன்னிச்சையான போக்கு அண்டை நாடுகளாலும் உலக நாடுகளாலும் கண்டிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, தைவானைச் சுற்றி ராணுவப் பயிற்சியின் போது சீனா ஏவுகணைகளை வீசியதற்கு ஜப்பான் பிரதமர் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும், சீனாவின் இந்த போக்கு ஜப்பானின் தேசிய பாதுகாப்பு மற்றும் தங்களது குடிமக்களின் பாதுகாப்பை பாதிக்கும் கடுமையான பிரச்சனையை உருவாக்கும் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
ஐந்து சீன ஏவுகணைகள் நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் விழுந்ததாகத் தெரிகிறது, அவற்றில் நான்கு தைவானின் மீது பறந்ததாக நம்பப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, சீனா உடனடியாக பயிற்சிகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஜப்பான் முன் வைத்துள்ளது.