சீனா தொழிற்சாலை ஒன்றில் கோர சம்பவம்... 20 கடந்த பலி எண்ணிக்கை
சீனாவில் பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் மரணமடைந்துள்ளதாகவும் 61 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
முழுமையான விசாரணை
இந்தச் சம்பவம், ஹுனான் மாகாணத்தின் சாங்ஷா நகரில் திங்கள்கிழமை பிற்பகல் நிகழ்ந்துள்ளது. தகவல் வெளியானதும் சம்பவ இடத்திற்கு சுமார் 500 தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி ஜி ஜின்பிங், வெடிப்புச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறும், இன்னும் காணாமல் போயுள்ளவர்களைத் தேடும் பணியில் முழு வீச்சில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
வெளியாகியுள்ள காணொளிக் காட்சிகளில் ஹுவாஷெங் பட்டாசு உற்பத்தி மற்றும் காட்சி நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையின் வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து அடர்த்தியான புகை சூழ்ந்து எழுகிறது.
வெடிப்பு நிகழ்ந்த பகுதியில் இடிந்து விழுந்த கட்டிடங்களும் சிதைவுகளும் சிதறிக் கிடப்பதும் பதிவாகியுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்
இதனிடையே, அருகிலுள்ள இரண்டு வெடிமருந்து கிடங்குகளாலும், அங்கிருந்து எழுந்த புகையாலும் ஏற்பட்ட ஆபத்தின் காரணமாக, அண்டைப்பகுதிகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டதாக சின்ஹுவா அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவில், சந்திரப் புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களின்போது பட்டாசுகள் பரவலாகவும், பெரும்பாலும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றியும் பயன்படுத்தப்படுவதால், பட்டாசு தொடர்பான வெடிப்புச் சம்பவங்கள் ஏற்படுவது அரிதானதல்ல என்றே கூறப்படுகிறது.

பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, கிழக்குப் பகுதியில் பட்டாசு வெடித்ததில் 12 பேர் மரணமடைந்தனர்.
கடந்த ஜூன் மாதம், ஹுனானில் உள்ள ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட மற்றொரு வெடிவிபத்தில் ஒன்பது பேர் மரணமடைந்தனர்; மேலும் 26 பேர் காயங்களுடன் தப்பினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |