ஹார்முஸ் அச்சுறுத்தல்... ஈரானுடன் பேச்சுவார்த்தையில் சீனா
ஹார்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் மற்றும் கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு கப்பல்களை பாதுகாப்பாக கடந்து செல்ல அனுமதிக்க சீனா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஹார்முஸ் நீரிணை
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் மிக மோசமான தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் சீனா தலையிட்டுள்ளது.

வியாழக்கிழமை ஆறாவது நாளை எட்டிய இந்தப் போர், முக்கியமான கப்பல் பாதையை முழுவதுமாக மூடிவிடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு துண்டிக்கும் நிலை ஏற்பட்டது.
ஈரானுடன் நட்புறவைக் கொண்ட சீனாவும், மத்திய கிழக்கு விநியோகங்களை பெரிதும் நம்பியிருக்கும் நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை முடக்கும் ஈரானின் நடவடிக்கை குறித்து அதிருப்தி அடைந்துள்ளதுடன், கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல அனுமதிக்குமாறு ஈரானை வலியுறுத்தியுள்ளது.
கத்தார் இராணுவத்தின் துரித நடவடிக்கை... ஈரான் குண்டுவீச்சில் இருந்து தப்பிய 10,000 அமெரிக்க வீரர்கள்
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, அதன் எண்ணெய் தேவையில் சுமார் 45 சதவீதத்தை ஹார்முஸ் நீரிணை வழியாகவே பெறுகிறது.
இந்த நிலையில் ஈரானின் கடும் எச்சரிக்கையை அடுத்து ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்த பல நாடுகளின் கப்பல்கள் அஞ்சிய நிலையில், சீன உரிமையாளருக்கு சொந்தமானதாக கருதப்படும் Iron Maiden என்ற கப்பல் எந்த அச்சுறுத்தலும் இன்றி ஹார்முஸ் நீரிணையைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், உலகளாவிய சந்தையை அமைதிப்படுத்த மேலதிக கப்பல்கள் நீரிணையைக் கடக்க வேண்டும். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலை 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
வளைகுடாவில் உள்ள எரிசக்தி வசதிகள் மற்றும் ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதுடன், உற்பத்தி நிறுத்தங்களுக்கும் இது வழி வகுத்தது.
300 எண்ணெய் கப்பல்கள்
ஈரானின் ஏவுகணைகள் சைப்ரஸ், அஜர்பைஜான் மற்றும் துருக்கி வரை தாக்குதல் நடத்தியுள்ளன, இது உலகளாவிய சந்தைகளை சீர்குலைத்து, முக்கிய பொருளாதார நாடுகளை பணவீக்க அபாயங்கள் குறித்து எச்சரிக்கத் தூண்டியுள்ளது.
ஜனவரி மாதத்திலிருந்து சராசரியாக ஒரு நாளைக்கு 24 கப்பல்கள் என்ற விகிதத்தில் இருந்த நிலையில், போர் வெடித்த மறுநாளே, மார்ச் 1 ஆம் திகதி ஹார்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்து நான்கு கப்பல்களாகக் குறைந்தது.
ஈரான் அச்சுறுத்தல்களுக்கு பயந்து தற்போதும் நீரிணைக்குள் சுமார் 300 எண்ணெய் கப்பல்கள் கடக்க முடியாமல் சிக்கியுள்ளன. இதனிடையே, சீனா அல்லது ஈரான் உரிமையாளர்களின் கப்பல்கள் சில தற்போது நீரிணையைக் கடக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், சர்க்கரையை ஏற்றிச் செல்லும் சில கப்பல்கள் தற்போது நீரிணை வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றன, மற்றவை அனுமதிக்கப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் அல்லது அவற்றின் நட்பு நாடுகளைச் சேர்ந்த எந்தவொரு கப்பல்களும் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல அனுமதிக்கப்படாது என்று ஈரான் அரசாங்கம் இந்த வார தொடக்கத்தில் கூறியது, ஆனால் அந்த அறிக்கையில் சீனாவைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |