Live Streamingல் மனைவியை தீ வைத்து எரித்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
டிக்டோக் லைவ் ஸ்ட்ரீமின் போது முன்னாள் மனைவியை தீ வைத்து எரித்த சீன நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சீனாவில் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் தனது முன்னாள் மனைவியை லைவ் ஸ்ட்ரீமின் போது எரித்து கொலை செய்த நபர் ஒருவருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
செப்டம்பர் 2020-ல் நடந்த இந்த கொடுரமான கொலைக்கு நாடு முழுவதும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. வேண்டுமென்றே செய்யப்பட்ட இந்த கொலைக்கு 2021 அக்டோபரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், உச்ச மக்கள் நீதிமன்ற உத்தரவின்படி குற்றவாளியாக நிருபிக்கப்பட்ட Tang Lu-விற்கு சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நகாவா திபெத்திய மற்றும் கியாங் தன்னாட்சி மாகாணத்தின் இடைநிலை மக்கள் நீதிமன்றம் வெளியிட்ட ஒரு குறுகிய அறிக்கையில் இந்த குற்றம் மிகவும் கொடூரமானது என்றும், Tang Lu மிகக் கடுமையான தண்டனைக்கு தகுதியானவர் என்றும் கூறியுள்ளது.
லூவும் அவரது மனைவி லாமுவும் (Lamu) பதினொரு வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழந்த நிலையில் ஜூன் 2020-ல் பிரிந்தனர். இருவரும் TikTok-ன் சீனப் பதிப்பான Douyin-ல் பிரபலமாக இருந்துள்ளனர்.
PC: China Central Television
நீதிமன்றத்தின் அறிக்கையின்படி, லு விவாகரத்து பெற விரும்பவில்லை மற்றும் மீண்டும் சேர்ந்து வாழ பலமுறை முயன்றார், ஆனால் லாமு அந்த யோசனையை நிராகரித்தார்.
செப்டம்பர் 2020-ல், மனமுடைந்த லு தனது முன்னாள் மனைவியின் வீட்டிற்குச் சென்று, அவர் டூயினில் நேரலையில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தபோது, பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் தீக்காயங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட லாமு சில வாரங்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.