குடும்ப கட்டுப்பாட்டில் தளர்வு: 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி! எந்த நாட்டில் தெரியுமா?
சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்வதை அனுமதிக்கும் புதிய சட்டம் அதிகாரப்பூர்வமாக இயற்றப்பட்டது.
சீனாவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் கடந்த மே 11-ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இதில், கடந்த 1950-க்குப் பிறகு மக்கள் தொகை வளர்ச்சி, பத்தாண்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்திருப்பது கண்டறியப்பட்டது.
சீனாவின் மொத்த மக்கள் தொகை 141.2 கோடியாகும். கடந்த 1976-2016 வரை மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு குழந்தை திட்டம் கடுமையாக கடைபிடிக்கப்பட்டது.
இதனால், பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்ததால் 2016ல் இரண்டு குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனாலும், இதற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை.
இதன் காரணமாக, இளம் வயதினர் குறைந்து முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், சமூக, பொருளாதார, வேலைவாய்ப்பில் பல்வேறு எதிர்கால பிரச்னைகளை சந்திக்க வேண்டிய அபாயம் ஏற்படும் என சீனா உணர்ந்தது.
இதைத் தொடர்ந்து, 2 குழந்தைகளுக்குப் பதிலாக 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என சீன அரசு கடந்த மே மாதம் அறிவித்தது. இது சீனாவின் மிகப்பெரிய கொள்கை மாற்றாகும்.
இப்புதிய திட்டத்தை அமல்படுத்தும் வகையில் மக்கள் தொகை மற்றும் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தம் தேசிய மக்கள் காங்கிரசின் (NBC) நிலைக்குழு மூலம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.