அடுத்த 40 நாட்கள்... நாட்டின் பெரும்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதித்த சீனா
தைவான் மீதான படையெடுப்பு எந்நேரமும் நிகழலாம் என்ற அச்சம் வலுத்து வரும் நிலையில், சீனா அடுத்த 40 நாட்களுக்கு வான்வெளியின் பெரும் பகுதிகளை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒத்திகை பார்க்க
நாட்டின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதிக்கு அப்பாலுள்ள ஐந்து மண்டலங்களுக்குள் விமானங்கள் நுழைவதைத் தடுப்பதன் பின்னணி குறித்த எவ்வித விளக்கத்தையும் சீனா வெளியிடவில்லை.

ஆனால் சீனாவின் இந்த மர்மமான நடவடிக்கையானது தைவானைக் கைப்பற்றுவதற்குத் தேவையான வான்வழிப் போர் உத்திகளை ஒத்திகை பார்க்க முன்னெடுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பொதுவாக மக்கள் விடுதலை இராணுவம் எனப்படும் சீனாவின் இராணுவம் வான்வெளியை ஒரே நேரத்தில் சில நாட்களுக்கு மட்டும் முடக்கிவிட்டு, இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காகவே அவ்வாறு செய்திருப்பதாக அறிவிப்பதுண்டு.
ஆனால் தற்போது பயிற்சிகள் குறித்து அறிவிக்காமல், இவ்வளவு நீண்ட நாட்கள் மிகப் பெரிய பகுதி முழுவதும் விமானப் பறப்புத் தடை என்பது நிபுணர்களைக் கவலையடையச் செய்துள்ளது.
40 நாட்கள் என்பது அசாதாரணமான நடவடிக்கை என்றே ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ரே பவல் குறிப்பிடுகிறார். மார்ச் 27 தொடங்கி மே 6 ஆம் திகதி வரையில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்.
இம்மண்டலங்கள் தென் கொரியாவிற்கு அப்பால் உள்ள மஞ்சள் கடலிலிருந்து, ஜப்பானிற்கு அப்பால் உள்ள கிழக்குச் சீனக் கடல் வரை பரவியுள்ளது. அதாவது தைவான் நிலப்பரப்பை விட பெரியதொரு பகுதியாகும்.

உலக வல்லரசு
Notams என அறியப்படும் இந்தக் கட்டுப்பாடானது விமானப் பாதையிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திலோ ஏற்படும் தற்காலிக அபாயங்கள் குறித்து விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதாகும்.
இது விண்வெளிப் பாதைகள் உட்பட அனைத்து வான்வழிச் செயல்பாடுகளுக்கும் பொருந்தும். இதனிடையே, தைவான் விவகாரத்தில் சீனாவும் அமெரிக்காவும் போரிட்டால், எந்த உலக வல்லரசு வெற்றி பெறும் என்பதை, அமெரிக்காவின் அதிமுக்கிய ரகசியப் பாதுகாப்பு ஆவணம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த 40 நாட்கள் கட்டுப்பாடும் வெளியாகியுள்ளது.

மேலும், சீனாவின் மலிவானதும், மிகவும் மேம்பட்டதுமான ஆயுதங்களின் பெருமளவிலான உற்பத்தி, அமெரிக்காவின் போர் விமானங்கள், கப்பல்கள் மற்றும் செயற்கைக்கோள்களைப் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் ஆழ்த்துவதாகவும் கசிந்துள்ள அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |