ஓமிக்ரான் பரவலை அடுத்து சீனாவை உலுக்கும் அடுத்த தொற்று: தீவிர நடவடிக்கை WHO அழைப்பு
சீனாவில் முக்கிய சில நகரங்கள் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் புதிதாக பரவும் பறவைக் காய்ச்சலுக்கு ஐவர் பாதிக்கப்பட்டுள்ளதில் இருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
சிச்சுவான் மாகாணம், ஜெஜியாங் மாகாணம் மற்றும் குவாங்சி தன்னாட்சிப் பகுதி ஆகியவையில் பறவைக் காய்ச்சல் கடந்த ஆண்டு டிசம்பரில் அடையாளம் காணப்பட்டன. இதில் இருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில் எஞ்சிய மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவில் கடந்த 2014 முதல், 65 பேர் H5N6 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஆறு மாதங்களில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்றே தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நோய் பாதிக்கப்பட்ட பறவைகளை நேரிடையாக அணுக நேர்ந்ததாலையே பாதிப்புக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களிடம் இருந்து இந்த நோய் பரவவில்லை என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டாலும், தீவிர நடவடிக்கை தேவை என்றே தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கோழி உற்பத்தி மற்றும் வாத்து உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது.
சீனாவில் பலர் இன்னும் சந்தைகளில் நேரடியாக உயிருடனே கோழிகளை வாங்க விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.