போர் நடந்தால் நிச்சயம் அமெரிக்கா தோற்றுவிடும்! இந்த விஷயத்தில் தலையிடாதீங்க... சீனாவின் எச்சரிக்கை
தென்சீனக் கடல் மற்றும் தைவான் விவகாரம் இது ஒரு கட்டத்தில் போர் வரைக்கும் சென்றால் அமெரிக்கா தோற்கடிக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரம் தென்சீனக் கடல் பகுதியில் ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுடன் சேர்ந்து கூட்டு இராணுவ பயிற்சிகளில் அமேரிக்கா ஈடுபட்டது. இது சீனாவிற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி, தெற்கு ஜப்பானில் பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து இராணுவப் பயிற்சிகளுக்கான பொருட்களை எடுத்து செல்லும்போது அதிகப்படியான எரிபொருள்களை வீணடிப்பதாக சீனா குற்றச்சாட்டை எழுப்பியது.
ஏனெனில், தென் சீனக் கடல் முழுவதையும் சீனா தங்களுக்கு மட்டுமே உரிமை என நினைக்கிறது. தைவான் மற்றும் ஹாங்காங் பிரச்சினை, ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன இஸ்லாமியர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் போன்ற விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியாக மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், தென் சீனக் கடலில் ஏதேனும் மோதல் ஏற்பட்டால் அமெரிக்கா கண்டிப்பாக தோற்கடிக்கப்படும் என்று குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் ஆகிய இரண்டிலும் சீனா தனது கடல் ஆதிக்கத்தை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.