வுஹான் பெரும் பாதிப்பைவிட மோசமாக திணறும் சீனா
சீனாவில் வுஹான் நகரில் ஏற்பட்ட கொரோனா பேரழிவை விட மோசமான நிலையில் நாட்டின் இரு பகுதிகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சீனாவில் தலைநகர் பீஜிங் மற்றும் நான்கு பிராந்தியங்களில் டெல்டா மாறுபாடு அதி தீவிரமாக பரவி வருகிறது என தெரிய வந்துள்ளது.
நாஞ்சிங் நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் 9 துப்புரவு தொழிலாளர்களுக்கு ஜூலை 20ம் திகதி கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இதன் தாக்கத்தால் நாடு முழுவதும் 200 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, நாஞ்சிங் நகர நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், சுற்றுலா பகுதிகளையும் கலாச்சார தலங்களையும் மூட உத்தரவிட்டுள்ளது.
ஜியாங்சு மாகாணத்தில் பல் ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கனவே ஊரடங்கில் வைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் நாஞ்சிங் பகுதியில் 9.2 மில்லியன் குடியிருப்பாளர்களை இரண்டு முறை கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஹுனான் மாகாணத்தின் சுற்றுலா நகரமான ஜாங்ஜியாஜியில் 1.5 மில்லியன் மக்கள் ஊரடங்கு விதிகளின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
தலைநகர் பீஜிங்கில் உள்ள Changping மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்குள்ள 9 குடியிருப்பு சமூகத்தின் 41,000 மக்கள் ஊரடங்கு நடவடிக்கையில் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
வுஹான் நகரில் கொரோனா முதன் முதலில் கண்டறியப்பட்ட போது துரித நடவடிக்கையால் சீன அரசு பரவலை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது நான்கு மாகாணங்கள் மற்றும் தலைநகரில் டெல்டா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் மீறுவதில்லை எனவும், கடுமையான விதிகளுக்கு பழக்கப்பட்டவர்கள் அங்குள்ள மக்கள் என்பதால் தற்போதைய சூழலில் இருந்தும் வெளிவருவார்கள் என்றே கூறப்படுகிறது.