மணப்பெண்களை விலைக்கு வாங்க வேண்டாம்: மரண தண்டனை..எச்சரிக்கை விடுத்த நாடு
சர்வதேச திருமண மோசடிகள் அதிகரித்துள்ளதால் சீன குடிமக்களுக்கு தூதரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோதமாக திருமணத் தரகு சேவை
சீனாவில் மணப்பெண்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், ஆண்கள் பலரும் சட்டவிரோதமாக திருமணத் தரகு சேவைகளை பயன்படுத்துவது தெரிய வந்தது.
குறிப்பாக, வங்காளதேசத்தில் இருந்து முகவர்கள் மூலம் பெண்களை சீனர்கள் தேடி வந்தனர். பெண்களை விலைக்கும் வாங்கும் செயல்களும் அரங்கேறியுள்ளன.
சீனாவில் நிலவும் கடுமையான பாலின விகிதாச்சார ஏற்றத்தாழ்வு காரணமாகவே இத்தகைய சட்டவிரோத சந்தை பெருமளவில் வளர்ந்துள்ளது; 2020ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் திருமண வயதில் உள்ள பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை சுமார் 1.75 கோடி அதிகமாக உள்ளது.
சீன அரசு கவலை
இந்த நிலையில்தான், சர்வதேச திருமண தரகு சந்தை சீனாவில் சட்டவிரோதமானதாக அறிவித்து சீன அரசு கவலையை வெளிப்படுத்தி வருகிறது.
மேலும், மணப்பெண்களைத் தேட சட்டவிரோதத் திருமணத் தரகு சேவைகளைப் பயன்படுத்துவது குறித்து சீன தூதரகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
தரகர்கள் அல்லது முகமைகளைப் பயன்படுத்தி மனைவியைத் தேடி, வங்காளதேச நாட்டிற்கு செல்லும் எவரும், மனிதக் கடத்தல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படலாம் என்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
வங்காளதேச சட்டத்தின்படி, மனிதக் கடத்தல் குற்றத்தில் தண்டனை பெற்றால் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், குறைந்தது 5,00,000 டாக்காவிற்கு குறையாத அபராதமும் விதிக்கப்படும்.
மேலும், இந்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சீனக் குடிமக்கள் சம்பந்தப்பட்ட எல்லை தாண்டிய திருமண மோசடிகள் அதிகரித்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |