சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் உருவாக்கிய நபர் - எப்படி தெரியுமா?
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பழைய சிம் கார்டுகளில் இருந்து ஒரு நபர் தங்கம் உருவாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிம் கார்டுகளில் இருந்து தங்கம்
சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் உள்ள ஹுய்சோ நகரை சேர்ந்த கியோவோ என்ற நபர், பழைய கழிவு பொருட்களை சுத்திகரித்து அதில் இருந்து மதிப்புமிக்க பொருட்களை உருவாக்கி வருகிறார்.

இவர் தான் சேகரித்து வைத்துள்ள டன் கணக்கான சிம் கார்டுகள் மற்றும் மின்னணு சாதனங்களில் உள்ள சிப்களில் இருந்து தங்கத்தை உருவாக்கியுள்ளார்.
முதலில் சிம் கார்டு மற்றும் சிப்களை சிறு துகள்களாக உடைத்து, ரசாயனங்கள் நிரப்பப்பட்ட பீப்பாய்களில் போட்டு, அரிப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் வெப்பமாக்கல் உள்ளிட்ட தொடர்ச்சியான செயல்கள் மூலம் தங்கத்தை திரவ வடிவில் பிரித்தெடுக்கிறார்.
அதன் பின்னர், அதை வடிகட்டி 1,200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உருக்கி, 191 கிராம் தங்கக்கட்டியை உருவாக்கியுள்ளார்.
இதன் மதிப்பு சீனாவில் சுமார் 2 லட்சம் யுவான்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 லட்சம்) ஆகும்.

இந்த வீடியோவை பார்த்து பலரும் தங்கத்தை உருவாக்க, பழைய சிம் கார்டுகளை தேடி அலைகின்றனர். இதனால் சீனாவில் பழைய சிம் கார்டுகளுக்கு கடும் டிமாண்ட் உருவாகியுள்ளது.
செயல்முறையில் உள்ள ஆபத்து
ஆனால், இவ்வாறு முயற்சிக்க வேண்டாம் என கியோவோ எச்சரித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நான் ஒரு உரிமம் பெற்ற தொழில்முறை நிபுணர் என்பதால் இதைச் செய்தேன்; சாதாரண மக்கள் வீட்டில் இதை முயற்சிப்பது உயிருக்கே ஆபத்தாக முடியும்" என தெரிவித்துள்ளார்.
இந்த செயல்முறையின் போது வெளியாகும் நச்சு வாயுக்கள் மற்றும் பயன்படுத்தப்படும் Aqua Regia போன்ற வீரியமிக்க அமிலங்களும் நுரையீரலை பாதிக்கும் மற்றும் வெடிவிபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் இதற்கு அதிகளவிலான சிம் கார்டுகள் தேவைப்படும் என கூரப்படுகிறது. கியோவோ சுமார் 2 டன் சிம் மற்றும் எலெக்ட்ரானிக் கழிவுகளை பயன்படுத்தியுள்ளார்.
சிம் கார்டுகளில் பொதுவாக 0.001 கிராமுக்கு குறைவான அளவிலே தங்கம் இருக்கும். கியாவ் எடுத்தது போன்ற தங்கக்கட்டியைப் பெற லட்சக்கணக்கான சிம் கார்டுகள் தேவைப்படும் என கூறப்படுகிறது.
அதே போல், முறையான அங்கீகாரம் இன்றி இந்த செயல்முறையை மேற்கொள்வது இந்தியா மற்றும் சீனாவில் சட்டவிரோதமானதாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |