சீனாவில் பல புதிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிப்பு! வௌவால்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
சீனாவில் வௌவால்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், புதிய வகையிலான கொரோனா வைரஸ்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலக நாடுகள் அனைத்து, ஏற்கெனவே உலகம் முழுவதும் பரவி பல லட்சம் பேரை பலிகொண்டுள்ள கொரோனா பெருந்தொற்றுடன் போராடி வருகின்றன.
இந்த கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் ஆய்வுக்கூடத்திலிருந்து உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை கொரோனா வைரஸ்களை காடுகளில் இருந்து சேகரித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
வௌவால்கள் மத்தியில் எத்தனை கொரோனா வகைகள் உள்ளன என்பது குறித்தும் அதில் எத்தனை வகைகள் மனிதர்களுக்குப் பரவும் அபாயம் உள்ளது என்பது குறித்தும் கண்டறிய இது உதவும் எனச் சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெர்னல் செல் இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில், "வௌவால்களில் இருந்து மொத்தம் 24 கொரோனா வைரஸ்களை நாங்கள் சேகரித்துள்ளோம். அதில் நான்கு கொரோனா வகைகள் தற்போது பரவும் கோவிட் 19 வைரசுக்கு ஒத்து இருந்தது" என அதில் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019 மே மாதம் முதல் 2020 நவம்பர் மாதம் வரை சீனாவின் சிறிய காடுகளில் வசிக்கும் வெளவால்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளன. வௌவால்களின் கழிவு மற்றும் எச்சில்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.