பூமியை நோக்கி வரும் செயலிழந்த ராக்கெட்: பாதிப்பை ஏற்படுத்துமா? சீன அதிகாரிகள் விளக்கம்
கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் சீன ராக்கெட், வழியிலேயே எரிந்துவிடும் சாத்தியம் இருப்பதால், பூமியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
விண்வெளி குறித்த ஆய்வுகளுக்காக, தங்களுக்கேன சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. பூமிக்கு மேலே 370 கி.மீ., உயரத்தில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுவருகிறது.
இந்த புதிய விண்வெளி நிலையத்திற்கான முதல் கலத்தை 'Long March 5B' என்ற ராக்கெட் வாயிலாக, கடந்த மாதம் 29-ஆம் திகதி சீனா விண்ணில் ஏவியது. இந்த கலத்தின் எடை 22 டன் ஆகும்.
சீன விண்வெளி நிலைய கட்டுமான கலத்தை நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலை நிறுத்தி விட்டு, மீண்டும் பூமிக்கு திரும்புவதற்கான வேலைகளில் 'லாங் மார்ச் 5பி' ராக்கெட் ஈடுபட்டது.
அப்போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை ராக்கெட் இழந்தது. எந்த நேரமும் அந்த ராக்கெட், பூமியில் விழும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.
18 டன் எடைகொண்ட ராக்கெட்டின் பிரதான பாகம் தற்போது பூமியை நோக்கி விழத் தொடங்கியுள்ளது. முழு தகவல் கிடைக்காததால், பூமியின் எந்தப் பகுதியில் அந்த ராக்கெட் விழும் என்பதை கணிக்க முடியாமல் விஞ்ஞானிகள் தவித்து வருகின்றனர்.
இந்த ராக்கெட் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு (2300 GMT) பூமியில் விழும் என அமெரிக்கா கணித்துள்ளது. எங்கு விழும் என்பது தெரியாததால் இந்த ராக்கெட்டின் பாகங்கள் பூமியில் எவ்வளவு சேதாரத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்படவில்லை.
இது குறித்து, சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் (Wang Wenbin) கூறியதாவது;
கட்டுப்பாட்டை இழந்துள்ள ராக்கெட், பூமியின் புவி வட்ட பாதைக்குள் நுழையும்போது, அதன் பெரும்பாலான பகுதி தானாகவே எரித்து விடும். எனவே, பூமியில் இந்த ரொக்கெட் பெரும் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.
இது பூமியின் எந்த பகுதியில் விழும் என்பது குறித்து, சரியான நேரத்தில் தகவல் வெளியிடப்படும். பெரும்பாலும், சர்வதேச கடல்பகுதியில் இந்த ராக்கெட் விழுவதற்கான வாயப்புகள் அதிகம் இருப்பதாக, நிபுணர்கள் கருதுவதாக தெரிவித்தார்.