'வங்கி மண்' வாங்கினால் பணம் சேருவதாக நம்பிக்கை - வாங்கி குவிக்கும் மக்கள்
வங்கியின் வெளியே சேகரிக்கப்படும் மண்ணை வாங்கினால் செல்வம் சேரும் எனக்கூறி இணையத்தில் மண் விற்பனை அதிகரித்துள்ளது.
வங்கி மண்
சீனாவில் உள்ள வங்கிகளின் வாசலில் உள்ள மண்ணை வீட்டில் வைத்துக்கொண்டால் வீட்டில் உள்ள தீய சக்திகள் விலகி, செல்வம் சேரும் என்ற நம்பிக்கை பரவி வருகிறது.
இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து இணையத்தில் பலரும் 'வங்கி மண்' என்ற பெயரில் மண் விற்பனையை தொடங்கியுள்ளனர்.
பாக்கெட் மண் ரூ.10,000
இதற்காக வங்கியின் வாசலில் உள்ள மண், வங்கியின் பூந்தொட்டிகளில் உள்ள மண், பணம் எண்ணும் இயந்திரங்களிலிருந்து வரும் தூசியை கூட சேகரிக்கின்றனர்.
இந்த வங்கி மண்ணை, சிறிய பாக்கெட்டில் அடைத்து, 888 யுவான்(இந்திய மதிப்பில் ரூ.10,000) வரை விற்பனை செய்கிறார்கள்.
விற்பனையாளர் ஒருவர், Bank of China, Industrial and Commercial Bank of China, Agricultural Bank of China, China Construction Bank, மற்றும் Bank of Communications என சீனாவின் 5 முக்கிய வங்கிகளில் இருந்து மண்ணை சேகரித்து விற்பதாக தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து பேசிய விற்பனை பிரதிநிதி ஒருவர், இந்த மண் இரவில் எடுக்கப்பட்டது. இது உங்களை சூழ்ந்துள்ள கெட்ட சக்தியை அழித்து, செல்வதை சேர்க்கும். ஆனால் இதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
99.99சதவீத வெற்றி விகிதம்
சில விற்பனையாளர்கள் இந்த மண் 99.99 சதவீதம் வெற்றி விகிதத்தை கொண்டுள்ளதாக விளம்பரப்படுத்துகின்றனர். நம்பகத்தன்மையை அதிகரிக்க சிலர் வங்கியின் வாசலில், மண் சேகரிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
வாடிக்கையாளர் ஒருவர் தொழில் வளர்ச்சிக்கு இந்த மண் உதவும் என நம்பி வாங்கியுள்ளதாகவும், தன்னை போல் எனது நண்பர்கள் பலரும் இந்த மண்ணை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சீனாவின், நகர்ப்புற நிலஅமைப்பு விதிப்படி, பொது இடங்களில் இருந்து மண்ணை தோண்டுவது உட்பட பசுமையான இடங்களை அழிப்பதை தடை செய்துள்ளது.
"இது போன்று மண் அதிர்ஷ்டத்தை தரும் என விற்பனை செய்வது மோசடியாக கருதலாம். வாடிக்கையாளர் பணத்தை திரும்ப கோர உரிமையுள்ளது" என ஜெஜின் சட்ட நிறுவன வழக்கறிஞர் ஃபூ ஜியான் தெரிவித்துள்ளார்.
"நான் வங்கியில் உள்ள தொட்டியில் பூக்களை வளர்க்க என வீட்டில் இருந்துதான் மண்ணை கொண்டு வருவேன்", "நான் வங்கியின் அருகே தான் வசிக்கிறேன் என் செல்வம் ஏன் அதிகரிக்கவில்லை" என வங்கி ஊழியர் இந்த விற்பனையை விமர்சித்து வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |