சீனாவின் சரக்குக் கப்பல்களில் ஒன்றைத் தாக்கிய ரஷ்ய ட்ரோன்: உக்ரைனுக்கு விளக்கம்
பெய்ஜிங்கில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை விளாடிமிர் புடின் சந்திக்கவிருக்கும் நிலையில், தங்களது சரக்குக் கப்பல்களில் ஒன்றை ரஷ்ய ட்ரோன் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்துள்ளது.
உக்ரேனிய கடற்படை
கருங்கடலில் சீன சரக்குக் கப்பலான கேஎஸ்எல் டேயாங் மீது ரஷ்யாவின் ஷாஹெட் ட்ரோன் தாக்கியதாக உக்ரைன் திங்களன்று தெரிவித்தது. கூறப்படும் தாக்குதலுக்குப் பிறகு, கப்பலின் மேல் தளத்தின் ஒரு பகுதி கறுத்துப் போயிருப்பதைக் காட்டும் புகைப்படத்தை உக்ரேனிய கடற்படை வெளியிட்டது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட கப்பல் மார்ஷல் தீவுகளில் பதிவுசெய்யப்பட்டது என்றும், அதில் சீனக் குழுவினர் பயணம் செய்தனர் என்றும் சீன வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் செவ்வாயன்று தெரிவித்தார்.
மட்டுமின்றி, உக்ரைனில் உள்ள சீனத் தூதரகம், சீனக் குழுவினருடன் தொடர்பில் இருந்து, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வரவேற்ற ஜி ஜின்பிங்குடன், எரிசக்தி உறவுகளை ஆழப்படுத்தவும், உறவுகளை வலுப்படுத்தவும் ஆர்வமாக உள்ள புடின், செவ்வாய்க்கிழமை மாலை சீனாவுக்குப் பயணம் செய்வதற்குச் சற்று முன்னதாக இந்தத் தாக்குதல் சம்பவம் வெளியாகியுள்ளது.
ஒருபோதும் கண்டிக்கவில்லை
உக்ரைன் போர் விவகாரத்தில் முறையானப் பேச்சுவார்த்தையும் இணக்கப் பேச்சும் மட்டுமே தீர்வைத்தரும் என சீனா நம்புவதாகவும் குவோ ஜியாகுன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவரப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், ரஷ்யாவின் படையெடுப்பை அது ஒருபோதும் கண்டிக்கவில்லை.
மேலும், சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரஷ்யாவிற்கு வருவாய் மற்றும் இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களுக்கான மிக முக்கியமான ஆதாரமாகவும் சீனா திகழ்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |