இந்தியாவில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்! ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
ஹெலிகொப்டர் விபத்து
கேதார்நாத் கோவிலில் இருந்து உத்தரகாண்டில் உள்ள குப்த்காஷிக்கு சென்ற ஹெலிகொப்டர் ஒன்று, காட்டில் கீழே விழுந்து விபத்திற்குள்ளானது.
அதிகாலை 5.20 மணிக்கு நடந்த இந்த விபத்தில், விமானி உட்பட 7 பேர் பலியாகினர். அவர்களில் ஐந்து பேர் பெரியவர்கள் என்றும், 23 மாத குழந்தை ஒன்றும் என தெரிய வந்துள்ளது.
கௌரிகண்ட் மற்றும் சோன்ப்ரயாக்கிற்கு இடையில் 10 நிமிட பயணத்தின்போது ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியுள்ளது.
உத்தரகாண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வானிலை மோசமாகிவிட்டது
இந்த விபத்து குறித்து மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த ராகுல் சௌபே கூறுகையில், "திரும்பும் பயணத்தின்போது வானிலை மோசமாகிவிட்டது. ஹெலிகொப்டரை பள்ளத்தாக்கில் இருந்து நகர்த்த விமானி முயன்றார்; ஆனால் அது கௌரிகண்ட் அருகே விபத்திற்குள்ளானது. NDRF மற்றும் SDRF உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் உயிரிழந்தவர்களின் விவரம் தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிராவின் யவத்மாலைச் சேர்ந்த ஜெய்ஸ்வால் குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஜெய்ஸ்வால், ஷ்ரத்தா ஜெய்ஸ்வால் மற்றும் அவர்களது 23 மாத மகள் காஷி ஆகிய மூன்று பேர் இதில் பரிதாபமாக இறந்துள்ளனர்.
ஹெலிகொப்டர் விபத்து குறித்த துயரமான செய்தி கிடைத்துள்ளதாகவும், மீட்புப் பணிகளில் SDRF, உள்ளூர் நிர்வாகம் மற்றும் பிற மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |