ஒரே ஒரு சிகரெட் துண்டு... பற்றியெரியும் 1,000 ஏக்கர் வனப்பகுதி
ஸ்பெயின் நாட்டில் கோஸ்டா பிராவா பகுதியில் பற்றியெரியும் காட்டுத்தீயால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த காட்டுத்தீயால் வெள்ளிக்கிழமை முதல் Cap de Creus தேசிய பூங்காவின் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், அப்பகுதி வழியாக காரில் சென்ற ஒருவர் தூக்கி வீசிய ஒரு சிகரெட் துண்டால் இந்த காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கொழுந்துவிட்டெரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, தீயணைப்பு வீரர்கள் விமானம் மூலம் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
90 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, பல பகுதிகளில் நின்று போராடி வருவதாகவும், அவர்களுக்கு உதவியாக 6 விமானங்களை பயன்படுத்தி தீயை அணைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக முதன்மை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
50 ஆண்டுகளுக்கான சேதம் ஒரே ஒரு சிகரெட் துண்டால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்டுள்ளதாக மாகாண நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாதிப்புக்குள்ளான பகுதியில் இருந்து சுமார் 350 பேர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், 230 பேர்களுக்கும் அதிகமானவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காட்டுத்தீக்கு காரணமானவரை தேடி வருவதாகவும், சிகரெட் துண்டை வீசி எறிந்த நபர் மீது கண்டிப்பாக குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.