ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு குர்திஷ் மக்களுக்கு ஆயுதமளிக்கும் அமெரிக்கா - முழு விவரம்
ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த குர்திஷ் மக்களுக்கு ஆயுதம் வழங்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு முயற்சி
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில், ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் மொஜ்தபா கமேனியை (Mojtaba Khamenei) ஈரானின் புதிய உச்சத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஈரானும் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த போர் சூழலை பயன்படுத்தி, ஈரானில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க அமெரிக்கா விரும்புகிறது.
முன்னதாக கடந்த மாதம் ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், ஈரான் அரசு போராட்டத்தை கடுமையாக ஒடுக்கியது.

"தொடர்ந்து போராடுங்கள் உங்களுக்கான உதவி வந்து கொண்டிருக்கிறது" என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியிருந்தார்.
குர்திஷ்களை பயன்படுத்தும் அமெரிக்கா
இந்த சூழலில், குர்திஷ் இன மக்களுக்கு CIA மூலம் ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ உதவி வழங்கி அதன் மூலம் ஆட்சி மாற்றத்திற்கு முயற்சிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
இது தொடர்பாக ஈரானிய எதிர்க்கட்சி குழுக்கள் மற்றும் ஈராக்கில் உள்ள குர்திஷ் தலைவர்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

டிரம்ப்பம், ஈரானிய குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியின் (KDPI) தலைவர் முஸ்தபா ஹிஜ்ரியுடன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குர்திஷ் இன மக்கள், துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் ஆர்மீனியாவின் சில பகுதிகளில் 25 முதல் 30 மில்லியன் பேர் வசித்து வருகின்றனர். ஈரானில் மட்டும் சுமார் 10 மில்லியன் குர்திஷ் மக்கள் உள்ளனர்.

நீண்டகாலமாக தனி நாடு கோரி குர்திஷ் இன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஈரானின் மேற்கு எல்லை பகுதியில், ஈராக்கை தளமாக கொண்ட குர்திஷ் குழுக்கள் செயல்பட்டு வருகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆதரவை எதிர்பார்க்கும் இந்த குழுக்கள், "இப்போது எங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய நாட்களில், ஈராக்கிற்கு அருகே உள்ள ஈரான் எல்லையில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இது, குர்திஷ் போராளிகள் ஈரானுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை வழங்கும்.

இவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி ஈரானுக்கு எதிராக போரிட வைத்து மற்றுமொரு போர் முனையை திறப்பதன் மூலம், ஈரானிய ராணுவ வளத்தை சீர்குலைக்க முடியும்.
இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, மக்களை அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு அணி திரட்ட அமெரிக்கா முயற்சிக்கும். போராட்டத்தை ஒடுக்க முயலும் ஈரானிய பாதுகாப்பு படையை எதிர்த்து ஆயுதமேந்திய குர்திஷ் போராளிகள் தாக்குதல் நடத்துவார்கள்.
இதனை தொடர்ந்து குர்திஷ்களை அச்சுறுத்தலாக கருதும், ஈரான் குர்திஷ் நிலைகள் மீது ட்ரோன் தாக்குதலை தொடங்கியுள்ளது.
துருக்கி, ஈராக்கிற்கு உள்ள அச்சுறுத்தல்
குர்திஷ்களுக்கு ஆயுதம் வழங்குவது ஈராக்கின் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கும் என்ற அச்சமும் உள்ளது.
மேலும், துருக்கியில் நீண்ட காலமாக ஆயுதமேந்திய குர்திஷ் குழுக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டே போர் நிறுத்தம் ஏற்பட்டு, ஆயுத குழுக்கள் கலைக்கப்பட்டது.

தற்போது குர்திஷ் குழுக்களுக்கு ஆயுதம் வழங்குவதன் மூலம், குர்திஷ் பலம் பெற்றால் துருக்கி அதனை தன்னுடைய இறையாண்மைக்கு அச்சுறுத்தலான விடயமாகவே கருதும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |