போராட்டங்களை எதிர்கொள்ள... வெளிநாடொன்றில் தனது குடிமக்களை வலியுறுத்திய அமெரிக்கா
அமெரிக்காவிற்கு எதிராக கியூபா அரசாங்கத்தால் தூண்டிவிடப்பட்ட போராட்டங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அங்குள்ள அமெரிக்கத் தூதரகம் தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடுமையான இடையூறு
கியூபாவில் அமெரிக்க மக்கள் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலேயே, இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

அத்துடன், கியூபாவில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் மின்வெட்டு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய கடுமையான இடையூறுகளுக்குத் தயாராக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
சமீபத்திய வாரங்களில், நட்பு நாடான வெனிசுலாவில் இருந்து வரும் எண்ணெய் உட்பட, கியூபாவிற்கு உதவிகள் அனைத்தையும் தடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது.
இதனால், உணவு மற்றும் போக்குவரத்துக்கான விலை உயர்வு, கடுமையான எரிபொருள் பற்றாக்குறைக்கும் பல மணி நேர மின்வெட்டுகளுக்கும் வழிவகுத்தது.
இந்த நிலையில், எரிபொருள், நீர், உணவு மற்றும் கைபேசி சார்ஜ் ஆகியவற்றைச் சேமிப்பதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுங்கள், மேலும் குறிப்பிடத்தக்க இடையூறுகளுக்குத் தயாராக இருங்கள் என்று அமெரிக்க தூதரகம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கியூபாவில் உள்ள அல்லது கியூபாவிற்குப் பயணம் செய்யத் திட்டமிடும் அமெரிக்கக் குடிமக்களை எச்சரிப்பதாக குறிப்பிட்டு, அமெரிக்கக் குடிமக்கள் நாட்டிற்குள் நுழைய மறுக்கப்பட்ட சம்பவங்களும், அமெரிக்காவிற்கு எதிராக இயக்கப்படும் அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க எதிர்ப்புப் பேச்சுக்களில் அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கியூபா மீது நெருக்கடி அளிக்கத் தொடங்கியதுடன், ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அழுத்தமளித்தும் வருகிறார்.
ஏகாதிபத்திய அணுகுமுறை
இதனிடையே, மதூரோ கைது செய்யப்பட்ட அமெரிக்க நடவடிக்கையானது சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், வெனிசுலா எண்ணெயை கொள்ளையடிப்பதில் ட்ரம்ப் காட்டும் கவனம், ஒரு ஏகாதிபத்திய அணுகுமுறையை எதிரொலிப்பதாக மனித உரிமைகள் ஆர்வளர்கள் கருதுகின்றனர்.

வெனிசுலாவை அடுத்து கியூபாவும் வீழ்ச்சியடையும் என்றே ட்ரம்ப் கூறி வருகிறார். அத்துடன், கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகளின் பொருட்களுக்கு வரி விதிப்பதாகவும் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
இதனிடையே, கியூபாவும் அமெரிக்காவும் தொடர்பில் இருப்பதாக கியூபாவின் துணை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்தத் தொடர்புகள் முறையான பேச்சுவார்த்தையாக இன்னும் பரிணமிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |