14 மில்லியன் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதித்த நகரம்
சீனாவின் Tianjin நகரில் வசிக்கும் மொத்தம் 14 மில்லியன் மக்களுக்கும் அடுத்த 2 நாட்களில் கொரோனா சோதனை முன்னெடுக்க நகர நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
Tianjin நகரில் சுமார் 20 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நகர நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. சோதனை முடிவு வெளியாகும் வரையில் மக்கள் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே சுகாதார அட்டை வழங்கப்பட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 20 பேர்களில் இருவருக்கு ஓமிக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்ட நிலையிலேயே நகர நிர்வாகம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
வூஹான் நகரில் கொரோனா பரவல் முதன்முதலாக அடையாளம் காணப்பட்டு, தற்போது உலகின் மொத்த நாடுகளும் அதனால் அவதிப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கொரோனா இல்லாத சமூகம் என்ற செயல் திட்டத்துடன் சீனா தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள், தொடர் சோதனைகள், தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை சீனா முன்னெடுத்து வருகிறது. Tianjin நகரில் மக்கள் தாமாகவே முன்வந்து சோதனைக்கு உட்படுவதுடன், நகர நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கும் கட்டுப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, ஷியான் நகரில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டு மொத்த நகர மக்களும் தற்போது கடுமையான ஊரடங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே ச்செல்லவும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நகர நிர்வாகம் உணவு பண்டங்களை விநியோகம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் தாங்கள் பட்டினியால் சாகும் நிலையில் இருப்பதாக சமூக ஊடகங்களில் புகார் அளித்து வருகின்றனர்.