டோனி ஆலோசகராக செயல்படுவதில் சிக்கல்... பறந்த பரபரப்பு புகார்
இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் டோனி செயல்படுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கிண்ணம் தொடர் எதிர்வரும் அக்டோபர் 17ம் திகதி தொடங்கவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டி20 உலகக்கிண்ணத்திற்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ வெளியிட்டது.
அதில், 15 வீரர்களும் 3 ரிசர்வ் வீரர்களும் அறிவிக்கப்பட்டனர். மட்டுமின்றி, உலகக்கிண்ணம் தொடரின் போது ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் எம்.எஸ்.டோனி செயல்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் டோனியை ஆலோசகராக்கும் முடிவுக்கு வேட்டு வைக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் உறுப்பினரான சஞ்சீவ் குப்தா பிசிசிஐ-க்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் இந்திய அணியின் ஆலோசகராக டோனி செயல்படப் போவதாக அறிவித்த உத்தரவை ரத்து செய்யுங்கள் எனக்கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-ன் விதிமுறைகளில் 38 (4)-ன் படி ஒருவர் ஒரே நேரத்தில் 2 பதவிகளை வகிக்கக்கூடாது.
டோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும், இந்திய அணி ஆலோசகராகவும் செயல்பட முடியாது. எனவே பிசிசிஐ-ன் அபெக்ஸ் கவுன்சில் இதனை விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என சஞ்சீவ் குப்தா குறிப்பிட்டுள்ளார்.
டோனியின் தலைமையில் இந்தியா இதுவரை 3 ஐசிசி கிண்ணங்களை வென்றுள்ளது. அவரின் ஆலோசனைகள் இந்திய அணிக்கு நிச்சயம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.