சிக்கிய தாலிபான்கள்... மிரட்டல் விடுத்த பைடன் நிர்வாகம்
கை, கால்களை துண்டிப்பது போன்ற கொடூர தண்டனைகள் தொடரும் என்று தாலிபான்கள் அறிவித்துள்ளதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் தெரிவிக்கையில், தாலிபான்கள் ஷரியத் சட்டத்தினை பின்பற்றுவதாகக் கூறி நிறைவேற்றும் தண்டனைகள் தெளிவாக மனித உரிமைகளை மீறுவதாக உள்ளன.
தாலிபான்களின் தண்டனை குறித்த அறிக்கை மட்டுமல்லாமல் அவர்களின் செயல்பாடுகளையும் அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், குழந்தைகளின் நலன் காக்க அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தாலிபான் அமைப்பை நிறுவியர்களுள் ஒருவரான முல்லா நூருதீன் துராபி அண்மையில் அளித்த பேட்டியில், தாலிபான்களின் முந்தைய ஆட்சியின் போது தவறு செய்பவர்களுக்கு மைதானத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதுவும் குற்றத்திற்கு ஏற்ப கை, கால்களை துண்டிக்கும் தண்டனைகள் வழங்கப்பட்டன. நாங்கள் மைதானத்தில் தண்டனை அளிப்பதை அனைவரும் கேள்வி கேட்கின்றனர். நாங்கள் யாருடைய சட்டங்களையும், தண்டனைகளையும் கேள்வி கேட்டதில்லையே.
எங்கள் சட்டம் எப்படியிருக்க வேண்டும் என்று எங்களுக்கு யாரும் சொல்லித்தரத் தேவையில்லை.
நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறோம். குரானின் அடிப்படையில் நாங்கள் எங்களின் சட்டத்திட்டங்களை வகுக்கிறோம் என அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.