புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது! முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி
நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசிய நாராயணசாமி, மத்திய பாஜக மற்றும் புதுச்சேரி எதிர்க்கட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் மீது வாக்களிக்காமல் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேறினர்.
இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக அவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், அரசு கவிழ்ந்ததை அடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து, தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார் நாராயணசாமி.
இதன் பின் பேட்டியளித்த நாராயணசாமி, புதுச்சேரி அமைச்சரவையை ராஜினாமா செய்துள்ளோம், இனி முடிவு செய்ய வேண்டியது ஆளுநர்தான்.
நியமன எம்.எல்.ஏ-க்கள் மூலம் ஆட்சிக்கவிழ்பு செய்த என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக-வுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள் என கூறினார்.