நியூசிலாந்து பிரதமருக்கு அனுப்பப்பட்ட மர்ம பார்சல்... விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு: தொடரும் பரபரப்பு சம்பவங்கள்
நியூசிலாந்தில் இலங்கையர் ஒருவர் தாக்குதல் நடத்தியதன் பரபரப்பு அடங்குவதற்குள், தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடைபெற்றவண்ணம் உள்ளன.
இன்று நியூசிலாந்து பிரதமரின் அலுவலக முகவரிக்கு அனுப்பப்பட்ட ஒரு மர்ம பார்சல் ஒன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அலுவலகத்தின் ஒன்பதாவது மாடியில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அலுவலகப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, அவர் பணியாற்றிக்கொண்டிருந்ததற்கு கீழே, எட்டாவது மாடியில் பணியாற்றும் ஒருவர் அந்த பார்சலை வாங்கியுள்ளார்.
அந்த பார்சலில் வெள்ளை நிறப் பொடி ஒன்று இருக்கவே, உடனடியாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று சிறப்புக் குழுக்கள் களத்தில் இறங்கி கண்டெடுக்கப்பட்ட பார்சல் தொடர்பில் ஆய்வில் இறங்கியுள்ளார்கள்.
சமீபத்தில் இலங்கையர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை, கிறைஸ்ட்சர்ச் விமான நிலையத்தில் வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது, பிரதமருக்கே மர்ம பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே, தொடர்ந்து இதுபோன்ற விடயங்கள் நடைபெற்று வருவதால், நியூசிலாந்து பெரும் பரபரப்பில் உள்ளது.