சுற்றுலா சென்ற இந்திய இளம்பெண் மாயமான வழக்கு: கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல்
வெளிநாடு சுற்றுலா சென்ற இந்திய இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் மாயமாகியுள்ள நிலையில், அவர் கடலில் மூழ்கியிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்திருந்தார்கள்.
ஆனால், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் இந்திய இளம்பெண் மாயம்
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலையில் பயின்றுவந்தவர் இந்திய வம்சாவளியினரான சுதிக்ஷா (Sudiksha Konanki, 20) என்னும் இளம்பெண்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி, சுதிக்ஷா தனது சக மாணவ மாணவியர் ஐந்து பேருடன் டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் மாயமாகிவிட்டார். அவர் கடலில் மூழ்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.
கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல்
இந்நிலையில், சுதிக்ஷா கடத்தப்பட்டிருக்கலாம் என, தற்போது TJ வார்ட் (TJ Ward) என்னும் தனியார் துப்பறிவாளர் தெரிவித்துள்ளார்.
சுதிக்ஷா கடலில் மூழ்கி உயிரிழந்திருந்தால் அவரது உடல் கரையில் ஒதுங்கியிருக்கும். ஆனால், இதுவரை அவரது உடல் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், சுதிக்ஷா, ஒரு தம்பதியருடன் சென்றதைக் கண்டதாக செக்யூரிட்டி கார்டுகள் இருவர் தன்னிடம் கூறியதாக TJ வார்ட் தெரிவித்துள்ளார்.

அதாவது, சுதிக்ஷா, ஜோஷ் (Josh Riibe, 22) என்னும் இளைஞருடன் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். பின்னர் தான் மட்டும் தனியாக தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்குத் திரும்பிவிட்டதாக ஜோஷ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனியாக நின்ற சுதிக்ஷாவிடம் யாரோ ஒரு பெண் சென்று ஏதோ பேசியதாகவும், அந்தப் பெண் மற்றும் அவரது காதலருடன் சுதிக்ஷா எங்கோ சென்றதாகவும், தன்னிடம் அந்த செக்யூரிட்டி கார்டுகள் இருவர் கூறியதாகவும் TJ வார்ட் தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், சுதிஷாவிடம் பேசிய அந்தப் பெண்ணின் காதலர், போதைப்பொருள் கடத்தல்காரர் என நன்கு அறியப்பட்டவராம்.
ஆக, சுதிக்ஷா கடத்தப்பட்டிருக்கலாம் என்கிறார் TJ வார்ட். அத்துடன், சுதிக்ஷாவின் உடல் கூட கிடைக்காத நிலையில், இந்த வழக்கு அவசர அவசரமாக இரண்டே வாரங்களில் முடித்துவைக்கப்பட்டுள்ளதாகவும், டொமினிக்கன் அதிகாரிகளுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் என தான் கருதுவதாகவும், அவர்கள் வழக்கை மூடி மறைக்க முயல்வதாகவும் TJ வார்ட் தெரிவித்துள்ளார்.
மேலும், மகள் குறித்து கவலை தெரிவித்துவந்த சுதிக்ஷாவின் பெற்றோரும் அமைதியாகிவிட்டதாகவும், அவர்களையும் அதிகாரிகள் மிரட்டி அமைதியாக்கியிருக்கலாம் என தான் கருதுவதாகவும் TJ வார்ட் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் கண்டறித்த விடயங்களை டொமினிக்கன் அதிகாரிகளுக்கும், சுதிக்ஷாவின் பெற்றோருக்கும் தான் தெரியப்படுத்தியுள்ளதாகவும், ஆனால், யாரும் அதற்கு ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என்றும் TJ வார்ட் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |