பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்?: ஒரே நாளில் புதிதாக 49,156 பேருக்கு தொற்று பரவலையடுத்து பிரதமர் திட்டம்
பிரித்தானியாவில் நேற்று ஒரு நாளில் மட்டுமே புதிதாக 49,156 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள விடயம், அடுத்த சில மாதங்கள் சவாலாக இருக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
கொரோனா தொற்றும், அதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும், மேற்கு ஐரோப்பாவை விட பிரித்தானியாவில் கணிசமாக அதிகரித்துள்ளன. நேற்று மட்டுமே பிரித்தானியாவில் 45 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள்.
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்குமானால், மாஸ்க், தடுப்பூசி பாஸ்போர்ட் மற்றும் வீட்டிலிருந்தவண்ண வேலை ஆகிய கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படலாம் என கடந்த மாதம் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.
தடுப்பூசி திட்டம் தொடங்கியபோது பிரித்தானியா தடுப்பூசி அளிப்பதில் முன்னணி வகித்தது. ஆனால், இப்போது அது இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை விட குறைவான வேகத்தில் தடுப்பூசி அளித்து வருகிறது.
50 வயதை தாண்டியவர்கள் மற்றும் எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்குப் பின் பூஸ்டர் டோஸ் அளிக்கும் திட்டம் உள்ளது. ஆனால், அதுவும் மிகவும் மெதுவாக நடைபெறுவதால் ஜனவரி இறுதிவரை அத்திட்டம் செல்லும் போல் உள்ளது.
இன்னொரு பக்கம், இங்கிலாந்தில் 12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களில் 15 சதவிகிதத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குளிர்காலம் நெருங்கி வருவதால் மீண்டும் தொற்று அதிகரித்து மருத்துவமனைகள் அழுத்தத்திற்குள்ளாகும் ஒரு நிலை ஏற்படுமோ என்ற ஒரு அச்சம் உருவாகியுள்ளது.
ஆனால், நேற்றிரவு பேசிய பிரதமரின் செய்தித்தொடர்பாளர், மீண்டும் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்றார்.
இருந்தாலும், மீண்டும் தொற்று அதிகரித்து மருத்துவமனைகள் அழுத்தத்திற்குள்ளாகும் ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில், மாஸ்க், தடுப்பூசி பாஸ்போர்ட் மற்றும் வீட்டிலிருந்தவண்ண வேலை ஆகிய கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
நேற்று ஒரு நாளில் மட்டுமே பிரித்தானியாவில் புதிதாக 49,156 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில மாதங்கள் சவாலாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கருதுகிறார்கள்.