மீண்டும் உச்சமடையும் கொரோனா வைரஸ்! புதிய கட்டுப்பாட்டுகளை விதித்த பிரபல நாடு
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அந்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் உள்ள வுஹான் நகரில் தோன்றியது. அதன் பிறகு தான் உலகம் முழுவதும் பரவியது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி பேராயுதமாய் செயல்பட்டாலும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை.
சீனா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது.
இதனால் பள்ளிகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து பொது போக்குவரத்து பயணங்களை தவிர்க்குமாறு பொதுமக்களை அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.
அதே போல் கொரோனா பரவல் காரணமாக சீனாவில் உள்ள கன்சு மாகாணத்தில் பேருந்து மற்றும் டாக்ஸி சேவைகளை நிறுத்தப்பட்டுள்ளன.. மேலும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து மக்களையும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சீனாவில் அதிகரித்து வரும் கொரோனாவிற்கு டெல்டா மாறுபாடு தான் காரணம் என்று அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
சுகாதார ஆணையத்தின் தலைவர் மி ஃபெங் பெய்ஜிங்கில் செய்தி தொடர்பாளரை சந்தித்து பேசியதாவது, அக்டோபர் 17 முதல் கொரோனா தொற்று 11 மாகாணங்களுக்கு பரவியது.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரநிலை உத்தரவை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.