கொரோனா சூழலால் கூடுதலாக 10 லட்சம் பேருக்கு இந்த பாதிப்பு: எச்சரிக்கும் ஆய்வாளர்கள்
கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக வழக்கத்தைவிட கூடுதலாக 10 லட்சம் காசநோய் பாதிப்பு ஏற்படும் என வெளியாகியுள்ள தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 10 லட்சம் கூடுதல் காசநோய் பாதிப்புகளை உலகம் காணக்கூடும் என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா காரணமாக உலகம் முழுவதும் காசநோய் பாதிப்பில் 10 லட்சம் அதிகரிப்பு இருக்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) முன்னாள் இயக்குநருமான டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, கொரோனா காரணமாக லாக்டவுன் மற்றும் பிற கட்டுப்பாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவுக்கு வழிவகுத்துள்ளன.
உற்பத்தி சரிவு ஊட்டச்சத்து குறைபாட்டை அதிகரிக்கும். ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக ஆண்டுக்கு 10 லட்சம் மக்கள் காசநோயால் பாதிக்கப்படக்கூடும்.
கொரோனா பரவலால் காசநோய் அறிவிப்பு 50 முதல் 60% வரை குறைந்தது, இது எதிர்காலத்தில் அதிக நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்றார்.
காசநோய் உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி மக்களை பாதிக்கிறது. 10 லட்சத்து 40 ஆயிரம் பேர் மரணத்திற்கு காசநோய் முக்கிய காரணியாக அமைகிறது.
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை இறப்புகளை மேலும் அதிகப்படுத்தும் என அச்சம் வெளியாகியுள்ளது.