ஐரோப்பியாவை உலுக்கும் கொரோனா தொற்று! மீண்டும் ஊரடங்கு அமலாகுமா?
ஐரோப்பியா நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மீண்டும் ஊரடங்கு அமலாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 2019ம் ஆண்டிலிருந்து கொரோனா வைரஸ் உலக நாடுகளை இடைவிடாமல் தாக்கி வருகின்றது. இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவில் உள்ள வூஹான் பகுதியில் கண்டறியப்பட்டது. இது நாளடைவில் பல கோணங்களில் உருமாறி மக்களை வாட்டி வதைக்கிறது.
கொரோனா முதல் அலையில் இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அந்த வகையில் அங்கு கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டதால் நோய் தாக்கம் குறைந்தது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தடைகளை வாபஸ் பெற்று கொண்டனர்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைத்தூக்க தொடங்கியுள்ளது. ஜேர்மனியில் ஒரே நாளில் 59, 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தென் மாகாணமான பவாரியாவில் கிறிஸ்துமஸ் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தில் திரையரங்குகள், அருங்காட்சியம் செல்வதற்கு கட்டாயமாக கொரோனா சான்றிதழ் தேவை. மேலும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கட்டுப்பாடுகளை டிசம்பர் 12ஆம் திகதி வரை அரசு நீட்டித்துள்ளது. ஆஸ்திரியாவில் கொரோனா நோய் அதிகமாக பரவி வருவதால் ஏற்கனவே அங்கு 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சுவீடன், செக்குடியரசு, ஸ்லோவாக் கியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டில் 5வது அலையின் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் கையை மீறி செல்வதால் மீண்டும் ஊரடங்கு அமலில் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.