ஜனநாயகனுக்கு சான்றிதழ் வழங்க தீர்ப்பளித்தும் சிக்கல் - தணிக்கை வாரியம் எடுத்த அதிரடி முடிவு
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ய உள்ளது.
ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ்
விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான ஜன நாயகன் திரைப்படத்தை வரும் ஜனவரி 9 ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், மறுதணிக்கை செய்யப்பட உள்ளதாக தணிக்கை வாரியம் தெரிவித்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இல்லாததால் படம் 9 ஆம் திகதியன்று வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி, ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, நீதிபதி பி.டி.ஆஷா முன்பு ஜனவரி 7 ஆம் திகதி நடைபெற்றது.
தணிக்கை வாரியம் மற்றும் தயாரிப்பு நிறுவன தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தீர்ப்பை 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
இன்று தீர்ப்பளித்த நீதிபதி, "ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவதாக எடுக்கப்பட்ட முடிவு தவறானது இத்தகைய புகார்களை விசாரிப்பது ஒரு ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும். ஜனநாயகன் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க வேண்டும்" என தீர்ப்பளித்தார்
தணிக்கை வாரியம் மேல்முறையீடு
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து தணிக்கை வாரியத் தலைவர் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேல்முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரணைக்கு எடுப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
"11;30 மணிக்கு தான் தீர்ப்பு பதிவேற்றப்படும். அதை படித்து பார்த்த பின் முடிவெடுக்கப்படும். மேல்முறையீடு சென்றால் அதனை பட தயாரிப்பு நிறுவனம் எதிர்கொள்ளும்" என ஜனநாயகன் படக் குழு தரப்பு வழக்கறிஞர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இதனால், ஜனநாயகன் படம் வெளியாவதில் இன்னும் சிக்கல் தொடர்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |