மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டல் - ஐபிஎல் வீரரை கைது செய்ய உத்தரவு
டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அபிஷேக் போரெலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அபிஷேக் போரெல்
மேற்கு வங்கத்தை சேர்ந்த 23 வயதான அபிஷேக் போரெல், 2023 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், அபிஷேக் போரெலை கைது செய்ய காவல்துறைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு மிரட்டியதாக தெரிவித்த புகாரில் அபிஷேக் போரெல் மற்றும் மற்றோரு நபரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாணவி அளித்த புகாரில், மாணவியை திருமணம் செய்வதாக கூறி 3 ஆண்டுகள் அவருடன் உடல் ரீதியாக நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
அபிஷேக் போரெல் கிரிக்கெட் வீரராகப் புகழ் பெறத் தொடங்கியதும், அவர் தன்னை விட்டு விலகி இருப்பதை உணர்ந்த மாணவி, வாக்குறுதியளித்தபடி தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கோரியுள்ளார்.
அதற்கு மறுத்த அபிஷேக் போரெல் மாணவியை அடித்ததாகவும், அவருடைய தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் அபிஷேக் உட்பட இருவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
கைது செய்ய உத்தரவு
இந்த வழக்கு இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

மாணவியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த இரு நபர்களும் இந்த மாணவியை மட்டுமல்லாமல், வேறு பல பெண்களையும் ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்களை எடுத்து, பின்னர் அவர்களை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறினர்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, இருவரையும் கைது செய்து, அவர்களிடம் உள்ள செல்போன் போன்ற மின்னணு சாதனங்களை கைப்பற்றி தனிப்பட்ட புகைப்படங்கள் அழிக்குமாறு ஹூக்ளியில் உள்ள மக்ரா காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்குள் ஒரு விரிவான அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |