ஒரே வாரத்தில் 400 சதவீதம் அதிகரிப்பு... தத்தளிக்கும் தென்னாபிரிக்கா
அச்சுறுத்தும் புதிய ஓமிக்ரான் தொற்று பரவல் வேகமெடுக்கும் நிலையில், தென்னாபிரிக்காவில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு ஆபிரிக்காவின் பொஸ்வானா நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் புதிய மாறுபாடான Omicron அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று ஒருநாள் மட்டும் தென்னாபிரிக்காவில் 4,473 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை இந்த என்ணிக்கையானது 868 என்றே இருந்தது. மேலும், திங்கட்கிழமை பதிவான 2,273 எண்ணிக்கையில் இருந்து இது 92 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 42,000 பேர்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உண்மையில் அச்சுத்தும் எண்ணிக்கை என முன்னணி தொற்றுநோயியல் நிபுணர் அச்சம் தெரிவித்துள்ளார்.
மக்கள் தயவு செய்து பாதுகாப்பாகவும், மாஸ்க் கட்டாயம் அணிந்து கொள்ளவும், கண்டிப்பாக தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, ஓமிக்ரான் தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், தற்போதுள்ள தடுப்பூசிகளின் பாதுகாப்பை அவை மீறிச்செல்லலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள புதிய மாறுபாடு பரவலானது தென்னாபிரிக்காவின் Gauteng பிராந்தியத்தில் அதிகமாக காணப்படுவதாகவும், நேற்று பதிவான மொத்த எண்ணிக்கையில் 72 சதவீதம் இந்த ஒரே பிராந்தியத்தில் பதிவானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த 13 நாட்களுக்கு முன்னர் புதிய ஓமிக்ரான் தொற்றானது பொஸ்வானா நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்டது. ஆனால், நெதர்லாந்து அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,
புதிய மாறுபாடு தொடர்பில் தென்னாபிரிக்கா தகவல் வெளியிடும் 5 நாட்களுக்கு முன்னரே, தங்கள் நாட்டில் அதன் மாதிரிகள் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.