தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு: முடிவெடுக்கும் பிரபல நாடு
கொரோனா பரவல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆஸ்திரியா அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை ஆஸ்திரியா சேன்ஸலர் அலெக்சாண்டர் ஷால்லென்பெர்க் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் மாநில அளவிலான தலைவர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசி போடாதவர்களால் தொற்றுநோய் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் அதில் நாம் தடுமாறப் போகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி கொரோனா பாதிப்பால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கினாலோ, அல்லது நாட்டின் அவசர சிகிச்சை பிரிவு படுக்கை எண்ணிக்கையில் 25 சதவீதத்தை எட்டினாலோ,
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை உணவகங்கள் அல்லது ஹொட்டல்களில் அனுமதிக்கும் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நேரிடும் என்றார் சேன்ஸலர் ஷால்லென்பெர்க்.
ஆனால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 600 கடந்தால், நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு ஊரடங்கு விதிக்கப்படும் எனவும், இதனால் மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அவர்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து வெளிவர முடியும் எனவும் சேன்ஸலர் ஷால்லென்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தரவுகளின் அடிப்படையில் ஆஸ்திரியாவில் 220 பேர்கள் கொரோனா பாதிப்பால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் ஆஸ்திரியாவில் புதிதாக 20,408 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என ஆஸ்திரியா அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது.
நாட்டில் இதுவரை 65.4 சதவீத மக்களே ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 62.2 சதவீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.