இஸ்ரேல் உடனான தடுப்பூசி ஒப்பந்தத்தை ரத்து செய்த பாலஸ்தீன்! என்ன நடந்தது?
மிக விரைவில் காலாவதியாகவுள்ள தடுப்பூசிகளை அனுப்பியதால் இஸ்ரேல் உடனான தடுப்பூசி இடமாற்று ஒப்பந்தத்தை பாலஸ்தீன் ரத்து செய்தது.
பாலஸ்தீனிய அரசாங்கம் அதன் தடுப்பூசி திட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த நிலையில், 50 சதவீதம் மக்களுக்கு முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளை வழங்கிய இஸ்ரேல், பாலஸ்தீனுக்கு தங்களிடம் உள்ள காலாவதியாகவுள்ள சுமார் ஒரு மில்லியன் ஃபைசர் கொரோனா தடுப்பூசிகளை கொடுப்பதாகவும், உடனடியாக பாலஸ்தீனிய மக்களுக்கு அவை பயன்படட்டும் என்று கூறியிருந்தது.
ஆனால் அதற்கு ஈடாக, இந்த ஆண்டின் இறுதியில் அதே ஒரு மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை திருப்பி கொடுத்தால் போதும் என இஸ்ரேல் கூறியது. இதன் அடிப்படையில் பாலஸ்தீன் அரசு இஸ்ரேலுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரேலில் இருந்து முதல் தொகுப்பாக 90,000 டோஸ்கள் பாலஸ்தீனுக்கு வந்தது. ஆனால் அவை, பாலஸ்தீனிய அதிகாரிகள் எதிர்பார்த்ததை விட காலாவதி தேதிக்கு மிக அருகில் இருந்துள்ளன.
அதில் குறிப்பிட்டுள்ள காலாவதி தேதிக்குள் அவற்றைப் பயன்படுத்த போதுமான நேரம் இல்லை என்றும் மேலும் இந்த காலாவதியாகவுள்ள தடுப்பூசிகள் தங்களுக்கு தேவையில்லை என்றும் கூறினர். அதன் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் இத்துடன் முடக்கப்படுவதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் கூறினர்.
மேலும், இந்த காலாவதியாகவுள்ள மருந்துகளுக்கு செலுத்துவதற்கு பதிலாக, ஃபைசர் நிறுவனத்திடமிருந்து புதிய தொகுப்புகளை பெற்றுக்கொள்வது சிறப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.