பிரித்தானியாவில் ஒரே வாரத்தில் ஒரு மில்லியன் மக்களுக்கு தொற்று... கடுமையாக பாதிக்கப்பட்ட 2 குழுவினர்
பிரித்தானியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1 மில்லியன் மக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது, கடந்த ஜனவரி மாதத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்பை சமன் செய்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், இரண்டு முக்கிய குழுவினர் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தகவலின் அடிப்படையில், 7 முதல் 11 வயதுடையவர்களில் கொரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 50 வயது கடந்தவர்களிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி அக்டோபர் 9 வரையான ஒரு வார காலத்தில் இங்கிலாந்தில் 60 பேர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 60 பேர்களில் ஒருவர் என்பது சுமார் 890,000 மக்களுக்கு சமம்.
கடந்த ஜனவரி துவக்கத்தில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் உச்சம் கண்டிருந்த இரண்டாவது அலை காலகட்டத்தில், 50 பேர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
வடக்கு கிழக்கு, கிழக்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் லண்டன் தவிர இங்கிலாந்தின் அனைத்து பகுதிகளிலும் நோய்த்தொற்றின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் பிரித்தானியாவில் 69,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, இளையோர்கள் மற்றும் 35 முதல் 55 வயதுடைய இரு குழுவினரும் இந்தமுறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.