பிரித்தானியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் Omicron கொரோனா வைரஸ் பரவல்: நீட்டிக்கப்பட இருக்கும் கட்டுப்பாடுகள்
பிரித்தானியாவில் தொடர்ந்து Omicron வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக, இம்மாதம், அதாவது டிசம்பர் 21 வரை மாஸ்க் அணிதல் கட்டாயம் என்னும் விதி சென்ற வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்தக் கட்டுப்பாட்டை நீட்டிப்பது தொடர்பான முடிவு, டிசம்பர் 18 வாக்கில்தான் எடுக்கப்படும் என ஒரு தகவல் வெளியான நிலையில், மாஸ்க் அணிதல் கட்டாயம் என்ற விதி குறைந்தபட்சம் மேலும் மூன்று வாரங்களுக்கு அமுலில் இருக்க வாய்ப்புள்ளதாக பிரித்தானிய அரசு அலுவலர்கள் சிலர் தெரிவித்துள்ளார்கள்.
Omicron வைரஸின் அச்சுறுத்தல் குறித்து மதிப்பீடு செய்ய அறிவியலாளர்களுக்கு இன்னும் சற்று அதிக கால அவகாசம் கொடுப்பதற்காக, இந்த விதி நீட்டிப்பு செய்யப்பட உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், Omicron வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களுடன் தொடர்பிலிருந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள், கட்டாய 10 நாட்கள் தனிமைப்படுத்தல் முதலான கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது.
அத்துடன், தடுப்பூசி பாஸ்போர்ட்கள், வீட்டிலிருந்து வேலை செய்ய பல மில்லியன் பணியாளர்களுக்கு உத்தரவு ஆகிய கட்டுப்பாடுகளும் அமுல்படுத்தப்பட உள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.